7 சாமி சிலைகளை விற்க முயன்ற பாஜக ராமநாதபுரம் நிர்வாகி உட்பட 4 பேர் அதிரடி கைது- கட்சி பதவி பறிப்பு!
ராமநாதபுரம்: ரூ.5 கோடி ரூபாய் மதிப்புடைய 7 சாமி சிலைகளை விற்க முயன்ற பாஜக பிரமுகர், இரு போலீசார் உட்பட 4 பேரை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்
ராமநாதபுரம் பகுதியில் தொன்மை வாய்ந்த சிலைகளை சிலர் விற்க முயற்சிப்பதாக மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

பிடிபட்ட பாஜக பிரமுகர்
இந்த தேடுதலின் போது தொன்மை வாய்ந்த சிலைகளை விற்க முயன்ற ஒருவர் கையும் களவுமாக பிடிப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் முதுகுளத்தூரை சேர்ந்த அலெக்சாண்டர் என்பதும், இவர் பாஜக சிறுபான்மையினர் பிரிவு ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக இருப்பதும் தெரியவந்தது. தன்னிடம் 7 தொன்மை வாய்ந்த சிலைகள் இருப்பதாகவும், அருப்புகோட்டை போலீசார் இளங்குமரன் மற்றும் விருதுநகரை சேர்ந்த கருப்புசாமி ஆகியோர் தம்மிடம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சிலை கடத்தல்
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இளங்குமரன் மற்றும் கருப்புசாமி ஆகியோரை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காவலர் இளங்குமரன், திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் நாகநரேந்திரன், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த கணேசன் மற்றும் விருதுநகரை சேர்ந்த கருப்புசாமி ஆகியோர் சேலம் எடப்பாடி அருகே ஒரு மலை அடிவாரத்தின் கிராமத்தில் சிலைகள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்றனர். அங்கு, தாங்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எனக்கூறி தொன்மையான 7 சிலைகளை பறித்து கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் பறிக்கப்பட்ட சிலையை ராமநாதபுரம் மாவட்டம் கூரிசேத்தனார் அய்யனார் கோவிலின் பின்புறம் உள்ள கால்வாயில் மறைத்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

போலீசுக்கு கூட்டாளியான பாஜக பிரமுகர்
இந்த சிலைகளை பாஜக பிரமுகரான அலெக்சாண்டரிடம் கொடுத்து 5 கோடி ரூபாய்க்கு விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து கால்வாயில் மறைத்து வைத்திருந்த 2 அடி உயரமுள்ள நடராஜர் சிலை, 1.5 அடி உயரமுள்ள நாககன்னி சிலை, 1 அடி உயரமுள்ள காளி சிலை, 3/4 அடி உயரமுள்ள முருகன் சிலை, 1/2 அடி உயர விநாயகர் சிலை, 1/2 நாக தேவதை சிலை ஆகிய 7 தொன்மை வாய்ந்த சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.

தொன்மை குறித்து விசாரணை
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 7 சிலைகள் எந்த கோயிலை சேர்ந்தது எனவும் சிலைகளின் தொன்மை குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜேஷ் மற்றும் கணேசன் ஆகியோரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

பொறுப்பு பறிப்பு
இதனிடையே சிலை திருட்டில் சிக்கிய அலெக்ஸாண்டரின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில சிறுபான்மை அணி பிரிவு தலைவர் ஆசிம் பாஷா வெளியிட்ட அறிக்கையில், சிறுபான்மை அணி மற்றும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அலெக்ஸாண்டர் அவர் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications