அரசியல் நாகரீகம்! ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்!
ராமநாதபுரம்: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தொகுதிவாரியாக மூன்று நாட்களுக்கு பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக சென்று தன்னார்வலர்கள் தொடங்கி, தொழில் நிறுவனங்கள், மக்கள் பிரதிநிகள் என அனைவரிடமும் கலந்து பேசி தேர்தல் அறிக்கையில் இடம் பெறக்கூடிய அம்சங்களை அவர்களிடம் இருந்தே பெற்று வருகிறது.
இந்தியாவில் இனி ஜனநாயகம் நீடிக்குமா? தேர்தல் முறை என ஒன்று இருக்குமா ? அரசியல் சட்டம் நிலைக்குமா ? என பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்கும் தேர்தலாக வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் இருக்கும் என சமீபத்தில் குறிப்பிட்டு இருந்தார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
அந்த வகையில், உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் 'பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற முழக்கத்துடன் 16.02.2024, 17.02.2024 , 18.02.2024 என மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் புதிய கல்விக் கொள்கையில் 8ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்கிறார்கள். நமது குழந்தைகள் படிக்கக் கூடாது என புதிய தேர்வுகளை திணிக்கிறார்கள்.
ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்கு நீட் தேர்வு வரவில்லை. அவர் தமிழகத்திற்குள் நீட் தேர்வை நுழையவிடவில்லை. நீட் விவகாரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும். அவர் மறைந்ததும் திருட்டுத்தனமாக மத்திய அரசான பாஜகவுக்கு அஞ்சி அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் கொண்டு வரப்பட்டது.
நீட் தொடர்பாக அனிதா முதல் ஜெகதீசன் வரை 21 பேர் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்த இருக்கிறோம். தமிழகத்தில் இருந்து என்றைக்கு நீட் தேர்வுக்கு விலக்கு ஏற்படுமோ அதுதான் முதல் வெற்றி. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். ஜெயலலிதா மீது முதல்வர் ஸ்டாலின் எத்தனையோ குற்றச்சாட்டுகளை சொன்னாலும் நீட் விவகாரத்தில் அவரும் ஜெயலலிதாவை பாராட்டத் தவறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநர் உரை தொடங்கிய போது உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் தமிழக சட்டசபை மரபுகளின்படி ஆளுநர் உரைக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்தும், உரையின் முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டும்.
தேசிய கீதம் விவகாரம், ஆளுநர் உரையில் சில விஷயங்களை குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த உரையை முற்றிலும் புறக்கணித்தார். இந்த நிலையில் இனி திமுக கட்சி கூட்டங்கள் அனைத்து தமிழ்த்தாய் வாழ்த்துடனே தொடங்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார். கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு சரஸ்வதி பாடல் பாடப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.












Click it and Unblock the Notifications