ராமநாதபுரம் ஏட்டு முரளி செல்வம் .. பூட்டிய வீட்டிற்குள் யாருமே இல்லாமல்.. கலங்க வைத்த காட்சி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வம் கடந்த 2003ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார். இவர் ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த ஏட்டு முரளி செல்வம், மருத்துவ விடுப்பில் தொடர் விடுமுறையில் இருந்துள்ளார்.. இந்நிலையில் பூட்டிய வீட்டிற்குள் அவர் இருந்த கோலம் உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது.
குடும்ப பிரச்சனையில் தனியாக வாழ்வது என்பதை இன்றைக்கு பலரும் எதிர்கொள்கிறார்கள். கணவன் மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகளில் சரியான புரிதல் இல்லாமல் பிரிந்து செல்கிறார்கள்.. அப்படி பிரிந்து செல்பவர்களால், அவர்களின் துணை தவறான முடிவெடுக்கிறார்கள். அண்மைக்காலத்தில் வேலூரில் ஒரு இன்ஸ்பெக்டர் மனைவி பிரிந்து சென்றதை தாங்காமல் உயிரை விட்டார். இதேபோல் சென்னையில் டிடிஆர் ஒருவர் மனைவி பிரிந்து சென்றதால் அவரும் அப்படி முடிவெடுத்தார். இதேபோல் கடந்த சில மாதங்களில் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன. ராமநாதபுரத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த வீர குலசேகர பாண்டியன் என்பவருடைய 42 வயது மகன் முரளி செல்வம் என்பவர் கடந்த 2003-ம் ஆண்டில் தமிழக காவல்துறையில் காவலராக பணியில் சேர்ந்தார். இவர் ராமநாதபுரம் பஜார் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக தற்போது பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் திருமணமான இவர் மனைவியை பிரிந்து ராமநாதபுரம் பட்டினம்காத்தான் மீனாட்சி நகரில் தனியாக வசித்து வந்தாராம்.
இந்தநிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த தலைமைக் காவலர் முரளி செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். கடந்த மாதம் பணிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் விடுமுறையை நீட்டிக்காமலும், எந்தவித தகவலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமலும் தொடர் விடுமுறையில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் இவரது வீடு சில நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார், முரளி செல்வம் வீட்டிற்கு வந்தனர்.. அங்கு வீட்டின் முன் கதவு மற்றும் பின் கதவு பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முரளி செல்வம் வீட்டிற்குள் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை.. பிரேத பரிசோதனைக்கு பின்னரே என்ன நடந்தது என்று தெரியவரும். ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications