ராமநாடில் வாய்ப்பில்லை..’ஓ’பிஎஸ் பின்னடைவுக்கு ‘ஒ’பிஎஸ்கள் காரணமா? இத்தனை ஓட்டு வாங்கியிருக்காங்களா?
ராமநாதபுரம்: லோக்சபா தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கையில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்து வருகிறார். இந்நிலையில் அவர் பெயரைக் கொண்ட ஐந்து பேர் தேர்தலில் களத்தில் இறங்கிய நிலையில் அது வெற்றியை பாதித்ததா என்பது குறித்து பார்க்கலாம்..
ராமநாதபுரம் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி இரண்டாவது முறையாக போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் பா.ஜெயாபெருமாள், பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் சுயேட்சை சின்னமாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சந்திரபிரபா ஜெயபால் ஆகியோர் களமிறங்கினர்.
தற்போது தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், நவாஸ் கனி முன்னிலை வகிக்கிறார். ஓபிஎஸ் பின்னடைவை சந்தித்து வருகிறார். அவருக்கு பிறகு ஜெயபெருமாள், சந்திரபிரபா ஜெயபால் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர். இதன் காரணமாக ஓபிஎஸ்-ன் வெற்றி வாய்ப்பு கேள்விக்குரியதாகவே இருக்கிறது. இதன் காரணமாக அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். மேலும் அவரது சொந்த ஊரான தேனியிலும் டிடிவி பின்னடைவை சந்தித்துள்ளார்.
இந்நிலையில் அவர் பெயரைக் கொண்ட ஐந்து பேர் தேர்தலில் களத்தில் இறங்கிய நிலையில் அது வெற்றியை பாதித்ததா என பார்க்கலாம். முதலில் தனது சொந்த ஊரான தேனியை விட்டுவிட்டு ராமநாதபுரம் தொகுதியில் களமிறங்குகிறார் ஓபிஎஸ் என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே நேரத்தில் அங்கேயும் ஓபிஎஸ்-க்கு மிகப்பெரிய சிக்கல் காத்திருந்தது. பன்னீர்செல்வம் என்ற பெயரைக் கொண்ட ஐந்து பேர் களத்தில் இறங்கினர்.
நான்கு பேர் ஒபிஎஸ் என்ற இன்சியல் கொண்டவர்கள். ஒ பன்னீர்செல்வம் என்ற பெயரில் நான்கு பேரும், எம் பன்னீர்செல்வம் என ஒருவரும் ஆக மொத்தம் ஆறு பன்னீர்செல்வங்கள் களத்தில் இறங்கினர். அகர வரிசைப்படி ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் இரண்டாவது வாக்கு இயந்திரத்தில் ஆறாவது இடத்திற்கு சென்றது. பிரச்சாரத்தின் போதும் சுயேச்சையாக போட்டியிட்ட பன்னீர் செல்வங்கள் ஓபிஎஸ் என்ற இன்சியலை பயன்படுத்தியே வாக்கு சேகரித்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் 25 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்ற நிலையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பன்னீர் செல்வங்கள் 500 வாக்குகளை கூட முழுமையாக பெற முடியவில்லை. ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் 294 வாக்குகளையும், மலையாண்டி மகன் பன்னீர்செல்வம் 199 வாக்குகளையும், ஒய்யாதேவர் மகன் பன்னீர்செல்வம் 163 வாக்குகளையும், ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் 102 வாக்குகளையும், ஒச்சத்தேவர் மகன் பன்னீர்செல்வம் 49 வாக்குகளை மட்டுமே 11 மணி நிலவரப்படி பெற்று இருந்தனர். இதன் காரணமாக ஓ.பன்னீர் செல்வத்தின் வாக்கை அவர்கள் பெரிய அளவில் பிரிக்கவில்லை.












Click it and Unblock the Notifications