சண்டை போட்டு எங்கும் கோபித்துக்கொண்டு செல்ல வேண்டாம்.. பெண்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் சொன்ன விஷயம்!
ராமநாதபுரம் : கணவன் மற்றும் மாமியார் உடன் ஏற்படும் சண்டையால் பெண்கள் எங்கும் கோபித்துக் கொண்டு செல்ல வேண்டாம். உங்களுக்கென்று மகளிர் சேவை மையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுகிறது எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் கீதா ஜீவன்.
Recommended Video
குடும்பத்தில் கணவன் மற்றும் மாமியார் உடன் பெண்களுக்குப் பிரச்சனை என்றால் பெண்கள் சேவை மையத்தை அணுகித் தீர்வு காணலாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள அன்னை சத்யா நினைவு இல்லம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் மகளிர் சேவை மையம் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆவின் பால் விலை உயராது.. வயிற்றில் பால்வார்த்த அமைச்சர் நாசர்.. விரைவில் தண்ணீர் பாட்டில் அறிமுகமாம்
முதல்வரின் சிறப்புத் திட்டங்கள்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், "தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் முதல்வரின் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் மாணவர்களை மீட்டெடுப்பது, பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
விழிப்புணர்வு
மேலும் கல்வித்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுக்க உள்ளோம். மேலும், பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள், முதியோர்கள் ஆகியோரின் பாதுகாப்பு, அவர்களின் உரிமையை நிலைநாட்டுதல், அதற்கான திட்டங்கள், சட்டங்களை முறைப்படுத்தி வருகிறோம்.
உதவி எண்
பெண்கள் உதவி சேவை எண் 181 என்பதை அனைத்து தரப்பு பொதுமக்களிடமும் கொண்டு சென்று சேர்த்து வருகிறோம். இந்த திட்டத்திற்கு முதல்வர் அவர்களே தனிக்கவனம் செலுத்தி வருகிறார். கணவன், மற்றும் மாமியார் உடன் ஏற்படும் சண்டையால் எங்கும் கோபித்துக் கொண்டு பெண்கள் செல்ல வேண்டாம்.
கோபித்துக்கொண்டு செல்லவேண்டாம்
உங்களுக்கென்று மகளிர் சேவை மையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்களின் வீட்டிற்கே சென்று அவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து உதவி மையத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.