களமிறங்கிய சவுதி அரேபியா.. இஸ்ரேல் தாக்குதலுக்கு நடுவே ஈரான் மக்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு
டெஹ்ரான்: இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் பயங்கர மோதல் நடந்து வருகிறது. இந்த மோதல் 3வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலை ஏற்கனவே சவுதி அரேபியா கண்டித்தது. இதன் அடுத்தக்கட்டமாக ஈரான் மக்களுக்கு உதவ சவுதி மன்னர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் போர் சூழலை ஏற்படுத்தி உள்ளது. ஈரானின் ராணுவ தளம், அணுஆயுதம் தயாரிப்பதற்கு தேவையான யுரேனியத்தை செறிவூட்டு மையம் உள்ளிட்டவற்றை குறிவைத்து இஸ்ரேல் நேற்று முன்தினம் வான்வெளி தாக்குதல் நடத்தியது.

இதில் ராணுவ தளம், யுரேனியம் செறிவூட்டும் மையம் சேதமாகி உள்ளது. அதேபோல் ராணுவ தளபதிகள், படைப்பிரிவின் தலைவர்கள், அணுசக்தி திட்டத்தில் பணியாற்றி விஞ்ஞானிகள் இறந்துள்ளனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் ஈரான், ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டது. அதன்பிறகு நேற்று ஏவுகணை தாக்குதல்களை இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்டு வருகிறது. 3 கட்டங்களாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை நோக்கி ஏவுகணை தாக்குதலை ஈரான் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேல் கடும் கோபமடைந்துள்ளது. ஈரான் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்க உள்ளது. இதுபற்றி இஸ்ரேல் ராணுவம் சார்பில், ‛‛ஈரான் மீதான நேற்றைய தாக்குதல் வெறும் தொடக்கம் தான். இன்னும் அதிகப்படியான தாக்குதல் இனி தான் நடக்கும்'' என்று தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் இன்று ஈரானின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து தாக்கி உள்ளது. ஈரானுக்கு பொருளாதாரம் ஈட்டி கொடுப்பது எண்ணெய் துறை தான். இதனால் அதனை இஸ்ரேல் குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளது. இருநாடுகள் இடையே போர் சூழல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தான் ஈரான் மக்களுக்கு உதவி செய்ய சவுதி அரேபியா முன்வந்துள்ளது. தற்போது சவுதி அரேபியாவில் ஹஜ் பயணத்துக்காக ஏராளமான ஈரான் மக்கள் சென்றுள்ளனர். இந்த சமயத்தில் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து ஈரான் தனது வான்வெளி பரப்பை முழுவதுமாக மூடி உள்ளது. இதனால் ஈரானில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து ஈரானுக்கும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சவுதி அரேபியா சென்ற ஈரான் மக்கள் மீண்டும் தங்களின் சொந்த நாட்டுக்கு திரும்பி செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் சவுதி அரேபியாவில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் ஹஜ் புனித யாத்திரைக்காக சவுதி அரேபியா வந்து நாடு திரும்பி முடியாமல் தவிக்கும் ஈரான் மக்களுக்கு உதவி செய்ய சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது.
இதற்கான உத்தரவை சவுதி மன்னர் சல்மான் பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் அவர், ‛‛ஈரான் மக்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். இதற்கான செலவை நாமே ஏற்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கையை ஹஸ் மற்றும் உம்ராஅமைச்சகம் மேற்கொள்ள வேண்டும். ஈரான் மக்களை விருந்தினர் போல் நடத்த வேண்டும் '' என்று உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி பார்த்தால் சவுதி அரேபியாவில் 80 ஆயிரம் ஈரான் மக்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இதில் ஒரு தரப்பினர் ஈரான் திரும்பி உள்ள நிலையில் இன்னொரு தரப்பினர் சவுதி அரேபியாவில் சிக்கி உள்ளனர். இவர்களுக்கு தேவையான உதவியை மேற்கொள்ள சவுதி பிரதமரும், பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மான் தொடங்கி உள்ளார்.
மேலும் இஸ்ரேல்- ஈரான் மோதலில் சவுதி அரேபியா வெளிப்படையாக ஈரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை சவுதி அரேபியா கண்டித்துள்ளது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சவுதி பட்டத்துக்கு இளவரசர் முகமது பின் சல்மானிடம் தொலைபேசியில் உரையாடினார். அப்போது ஈரான் - இஸ்ரேல் பிரச்சனையை முடித்து அமைதி திரும்ப தேவையான நடவடிக்கையை எடுக்க கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications