அமீரகத்தில் ஓவர்நைட்டில் மாயமான பிரபல முதலீட்டு நிறுவனம்! பல லட்ச ரூபாய் பணத்தை இழந்த இந்தியர்கள்
அமீரகம்: ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த ஒரு டிரேடிங் நிறுவனம் ஓவர் நைட்டில் மாயமாகியுள்ளது. இதனால் அங்குள்ள முதலீட்டாளர்கள் பல லட்சம் திர்ஹம்களை இழந்துள்ளனர். குறிப்பாக இந்தியர்கள் பலரும் பல லட்ச ரூபாய் மதிப்பில் அங்கு முதலீடு செய்திருந்த நிலையில், இப்போது அவர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
இந்தியர்கள் பலரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காகச் செல்வார்கள். பல ஆண்டுகள் அங்கேயே தங்கி வேலை செய்யும் அவர்கள், ஓரளவுக்குப் பணம் சேர்த்த பிறகு தாயகம் திரும்புவார்கள். குறிப்பாகத் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, தமிழகத்தில் இருந்து அதிக மக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வார்கள்.

ஓவர் நைட்டில் மாயம்
இதற்கிடையே ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த ஒரு டிரேடிங் நிறுவனம் ஓவர் நைட்டில் மாயமாகியுள்ளது. இதனால் அங்குள்ள முதலீட்டாளர்கள் பல லட்சம் திர்ஹம்களை இழந்துள்ளனர். கடந்த மாதம் வரை துபாயின் பிசினஸ் பே பகுதியில் உள்ள கேபிடல் கோல்டன் டவரில் மட்டும் இந்த கல்ஃப் ஃபர்ஸ்ட் கமர்ஷியல் புரோக்கர்ஸ் நிறுவனத்திற்கு இரண்டு அலுவலகங்கள் இருந்தன. அங்கு சுமார் 40+ ஊழியர்கள் வேலை செய்து வந்த நிலையில், அவர்கள் துபாயில் உள்ள பலரிடமும் முதலீடுகளைப் பெற்றுள்ளன.
ஆனால், இப்போது ஓவர்நைட்டில் அந்த இரு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. ஆபீஸ் இருந்த இடத்தில் யாருமே இல்லை.. அலுவலகம் வெறிச்சோடி இருக்கும் நிலையில், பணத்தை இழந்த முதலீட்டாளர்கள் கதறித் துடிக்கிறார்கள்.
அவசர அவசரமாக
இது தொடர்பாக கேபிடல் கோல்டன் டவரின் செக்யூரிட்டி கார்டு கூறுகையில், "அவர்கள் தங்கள் சாவியை ஒப்படைத்துவிட்டனர். ஓவர் நைட்டில் எல்லா பொருட்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினர். ஏதோ அவசர அவசரமாகக் கிளம்புவது போலவே இருந்தது. இப்போது தினசரி பலர் வந்து அவர்களைப் பற்றிக் கேட்டுச் செல்கிறார்கள்" என்றார்.
அங்கு முதலீடு செய்தவர்கள் தங்கள் பணம் என்னவானது என்பது தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள். அமீரகத்தில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த முகமது மற்றும் ஃபயாஸ் பொய்ல் ஆகியோர் இந்த நிறுவனத்தில் $75,000 முதலீடு செய்தனர். இப்போது அவர்களும் குழப்பத்திலும் வேதனையிலும் இருக்கிறார்கள்.
புலம்பும் இந்தியர்கள்
இது தொடர்பாக ஃபயாஸ் பொய்ல் கூறுகையில், "நான் இங்குப் பதில்களைத் தேடி வந்தேன்.. ஆனால் இங்கு யாருமே இல்லை.. அலுவலகங்கள் காலியாக உள்ளன. எங்களுக்குக் கொடுத்த எல்லா செல்போன் நம்பர்களுக்கும் கால் செய்தோம். ஆனால், யாரும் பதிலளிக்கவில்லை. இப்படி ஒரு அலுவலகமே இல்லாதது போல மொத்தமாக மாயமாகிவிட்டனர்" என்றார்.
அதேபோல சஞ்சீவ் என்ற மற்றொரு முதலீட்டாளர் கூறுகையில், "இது ஒரு ஆன்லைன் டிரேடிங் தளம். ஆனால் எந்தவொரு ஒழுங்குமுறை ஆணையத்திற்குக் கீழும் வராது. இருப்பினும், எல்லாம் பாதுகாப்பாக இருக்கும் என பேசி பேசியே எங்களிடம் இருந்து பணத்தை வாங்கிவிட்டார்கள். பல அப்பாவி முதலீட்டாளர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை முதலீடு செய்தனர். பலரும் செல்போனிலேயே பேசி பணத்தை வாங்கிவிட்டனர்" என்றார்.
எல்லாமே பொய்
இவர்களைப் போலப் பலர் இதில் முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளனர். கல்ஃப் ஃபர்ஸ்ட் மற்றும் சிக்மா-ஒன் ஆகிய இரு நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி மோசடி நடந்துள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துபாய் நிதி சேவைகள் ஆணையம் அல்லது பத்திரங்கள் & சந்தை ஆணையம் (SCA) என யாரிடமும் உரிய அங்கீகாரம் வாங்கவில்லை
கரீபியனில் உள்ள செயிண்ட் லூசியாவில் கம்பெனியை பதிவு செய்திருப்பதாகவும் முசல்லா டவரில் அலுவலகம் இருப்பதாகவும் வாடிக்கையாளர்களிடம் சொல்லியுள்ளனர். ஆனால், அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அப்படியொரு அலுவலகமே இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதேநேரம் ஐக்கிய அமீரகத்தில் இதுபோல மோசடி நடப்பது இது முதல்முறை இல்லை. இதற்கு முன்பும் இவிஎம் ப்ரைம், டூட்எஃப்எக்ஸ் என இதற்கு முன்பும் ஏமாற்றியுள்ளனர்.
இந்தியாவோ அல்லது எந்தவொரு நாடாக இருந்தாலும் இதுபோன்ற மோசடி பேர்வழிகள் இருக்கவே செய்கிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் உரிய முறையில் பதிவு செய்துள்ளனரா என்பதைச் சரிபார்த்த பிறகே பணத்தை முதலீடு செய்ய வேண்டும் எனப் பொருளாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications