ஹஜ் பயணம் போறீங்களா? இந்த தகவல் உங்களுக்காகத்தான்! பயணிகளுக்கு சவுதி புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!
ரியாத்: ஹஜ் பயணத்தில் குழந்தைகள் பங்கேற்பது தடை செய்யப்படுவதாக சவுதி அரேபியா அரசு தெரிவித்திருக்கிறது. மட்டுமல்லாது விசா கட்டுப்பாடுகளை மேலும் டைட் செய்வதாகவும் தெரிவித்திருக்கிறது.
ஒவ்வொரு இஸ்லாமியரின் மதக்கடமையாக ஹஜ் புனித யாத்திரை இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு யாத்திரிக்கு வந்தவர்களில் சுமார் 1300க்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர்.

இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டன. முதல் காரணம் வெயில் அதிகமாக இருந்ததுதான். 123 டிகிரி ஃபாரான்ஹீட் அளவுக்கு கடந்த ஆண்டு வெயில் பதிவாகியிருந்தது. எனவே, யாத்திரிகளுக்கு கடுமையான வெப்ப நோய்கள் ஏற்பட்டன. போதாத குறைக்கு அதிக நெரிசலும், கூடாரங்களில் ஏற்பட்ட தீ விபத்துகளும் உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்துவிட்டன.
இரண்டாவது காரணம், உரிய அனுமதியின்றி வருவதுதான். அதாவது ஹஜ் பயணத்திற்கு என குறிப்பிட்ட அளவுக்கு பணம் செலவாகும். ஆனால் சில டிராவல்ஸ் ஏஜென்சிகள், குறைந்த விலையில் யாத்திரைக்கு அழைத்து செல்வதாக விளம்பரங்கள் செய்கின்றன. இதனை நம்மும் யாத்திரிகள் பணம் கட்டி சவுதிக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு உரிய தங்கும் இடம், உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படுவதில்லை.
திட்டமிட்டு வரும் பயணிகளுக்கு மட்டுமே ஏசி வசதியுடன் கூடிய தங்குமிடமும், குடிநீர், உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஆனால், முன்பதிவில்லாத யாத்ரிகள் கால் நடையாகவே பல கி.மீ நடந்து ஹஜ்-ஐ அடைகிறார்கள். இந்த பயணத்தின்போது வயதானவர்கள், உடலில் நீர் சத்து குறைந்து உயிரிழக்கிறார்கள். இந்த மரணங்கள் ஹஜ் பயண கமிட்டிக்கும், உலக அரங்கில் சவுதிக்கும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு இப்படி உயிரிழந்தவர்களில் 100க்கும் அதிகமானோர் இந்தியர்கள்.
எனவே இந்த ஆண்டு பயண கட்டுப்பாடுகளை சவுதி டைட் செய்திருக்கிறது. அதன்படி இந்த ஆண்டு குழந்தைகள் ஹஜ் பயண யாத்திரைக்கு அனுமதிக்கமாட்டார்கள். அதேபோல பிப்.1 முதல் இந்தியா உட்பட 14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு ஒற்றை நுழைவு விசா (single-entry visas) மட்டுமே வழங்கப்படும். இரட்டை நுழைவு விசாக்கள் தவறாக பயன்படுத்தப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக சவுதியின் ஹஜ் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
அதே நேரம் ஹஜ் பயனத்தை அனைவருக்குமானதாக மாற்ற, சவுதியை சேர்ந்தவர்களுக்கு தவனை கட்டண முறையில் பயணத்திற்கு அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. புனித பயணத்திற்கு முன் பதிவு செய்த 72 மணி நேரத்தில் 20% கட்டணத்தை செலுத்த வேண்டும். அதைத்தொடர்ந்து ரமலான் சமயத்தில் 20% அடுத்தடுத்த நாட்களில் 20% என மொத்த பணத்தையும் பயணத்திற்கு முன்னர் கட்டி முடிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications