இந்தியா - பாகிஸ்தான் தலைவர்கள் சேர்ந்து டின்னர் சாப்பிட்டால் எப்படி இருக்கும்? டிரம்ப் ஐடியா
ரியாத்: ‛‛இந்தியா - பாகிஸ்தான் தலைவர்கள் உண்மையில் ஒத்துப்போகிறார்கள். இதனை இன்னும் கூட நாம் அதிகரித்தால் அவர்கள் ஒன்றாக அமர்ந்து டின்னர் சாப்பிடும் நிலைக்கு செல்வார்கள்.. இது நடந்தால் சூப்பராக இருக்குமே.. என்ன மார்கோ'' என்று சவூதி அரேபியாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அவர் சவூதி அரேபியாவில் உள்ளார். சவூதி அரேபியா - அமெரிக்கா முதலீடு மன்ற கூட்டம் நடந்தது. சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உள்பட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டர்.

இந்த கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் பேசினார். அப்போது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நான் தான் நிறுத்தினேன் என்று மீண்டும் தம்பட்டம் அடித்தார். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யவில்லை என்று நம் வெளியுறவுத்துறை ஏற்கனவே தெரிவித்த நிலையில் மீண்டும் அதனை டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி இந்தியா - பாகிஸ்தான் தலைவர்களுக்கு டின்னர் விருந்து கொடுத்தால் எப்படி இருக்கும் என்றும் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளார். இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் பேசியதாவது: சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் - பதற்றம் அதிகரித்தது. இதனை தடுக்க எனது நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. வரலாற்று சிறப்புமிக்க போர் நிறுத்தத்தை வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்து முடித்தோம். இந்த போர் நிறுத்தத்தை மேற்கொள்ள நான் வர்த்தகத்தை கையில் எடுத்தேன். போர் நிறுத்தினால் இணைந்து வர்த்தக ஒப்பந்தம் செய்வோம் என்றேன். அணுஆயுதம் தொடர்பான பிரச்சனை, வர்த்தகம் வேண்டாம். ஒவ்வொருவரும் அழகாக உருவாக்கும் பொருட்களை வர்த்தகமாக செய்வோம் என்றேன்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே வெடிக்க இருந்த அணுஆயுத போரை நாங்கள் தான் தடுத்தோம். இந்த போர் நடந்து இருந்தால் மில்லியன் கணக்கானவர்கள் இறந்திருப்பார்கள். துணை அதிபர் ஜேடி வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் போர் முடிவை கைவிட்டனர். இருநாடுகளின் தலைவர்களும் சக்தி வாய்ந்தவர்கள். மிகவும் வலிமையான தலைவர்கள். நல்ல தலைவர்கள். புத்திசாலித்தனமான தலைவர்கள். இதனால் போரை நிறுத்தினர். இது இனியும் அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன்.
உண்மையில் அவர்கள் (இந்தியா - பாகிஸ்தான்) நன்றாக பழகி வருகின்றனர் என்று நான் நினைக்கிறேன். என்ன மார்கோ (அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ). இன்னும் கூட அவர்களை நாம் நெருக்கமாக சேர்த்தால் அவர்கள் சேர்ந்து டின்னர் சாப்பிடும் அளவுக்கு செல்வார்கள். இது நடந்தால் நன்றாக இருக்கும் இல்லையா?'' என்று பேசி உள்ளார். டிரம்பின் இந்த பேச்சு கவனம் பெற்றது.












Click it and Unblock the Notifications