ஜமால் கொலைக்கு நீங்களே பொறுப்பு.. சவுதி இளவரசரிடம் வெளிப்படையாக சொன்ன அமெரிக்க அதிபர்!
ரியாத்: பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலைக்கு சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானே பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபராக பதவியேற்று முதல் முறையாக அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று 2 நாள் பயணமாக சவூதி அரேபியாவுக்கு அவர் சென்றார்.
அமெரிக்காவுடன் நெருங்கிய வர்த்தக உறவுகளை கொண்ட சவூதி அரேபியாவுக்கு அதிபர் ஜோ பைடன் மேற்கொண்ட பயணம் சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட உலக தலைவர்களுடன் கலந்துரையாடல்
சவூதியில் ஜோ பைடன்
சவூதி அரேபியாவின் ஜித்தா நகரத்துக்கு சென்றடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அல் சலாம் மாளிகையில் அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் வரவேற்றார். ஜோ பைடனை வரவேற்கும் நிகழ்வில் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் சல்மானின் மகனுமான முஹம்மது பின் சல்மானும் உடன் இருந்ததாக சவூதி அரேபிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது.
விமர்சனம்
அப்போது அல் சலாம் மாளிகையில் இருநாட்டு தலைவர்களும் வர்த்தக உறவுகள், எண்ணெய் வர்த்தகம், சர்வதேச பாதுகாப்பு, மனித உரிமை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானுடன் ஜோ பைடன் கைகுலுக்கியதை அமெரிக்க ஊடகங்களும் பத்திரிகையாளர் அமைப்புகளும் கடுமையாக விமர்சித்தனர்.
ஜமால் கசோகி படுகொலை
கடந்த 2018 ஆண்டு சவூதி அரேபிய அரசுக்கு எதிராகவும் முஹம்மது பின் சல்மானுக்கு எதிராகவும் எழுதி வந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி, துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதில் முஹம்மது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்தது. அப்போது சவூதி அரசுக்கும், முஹம்மது பின் சல்மானுக்கும் எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், மனித உரிமை மற்றும் பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
ஜோ பைடன் பேச்சு
முஹம்மது பின் சல்மான் உடனான சந்திப்பு சர்ச்சையான நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன், "ஜமால் கசோகி படுகொலை தொடர்பாக நான் என்ன நினைத்தேனோ அதை மேல்மட்ட கூட்டத்தில் தெளிவாக பேசி இருக்கிறேன். சுற்றி வளைக்காமல் நேருக்கு நேராக எனது கருத்தை பதிவு செய்துள்ளேன். ஒரு அமெரிக்க அதிபர் மனித உரிமைகள் சார்ந்த விவகாரங்களில் அமைதியாக இருக்கக்கூடாது.
நீங்கள்தான் காரணம்..
அந்த கூட்டத்தில், ஜமால் கசோகி கொலைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் கூறினார். ஆனால், நீங்கள்தான் அதை செய்தீர்கள் என்று நான் நினைப்பதாக கூறினேன். ஜமால் கசோகிக்கு நடந்தது கொடுமையானது." என்றார். அதிபர் தேர்தலின்போது ஜமால் கசோகி கொலையாளியை சர்வதேச அரங்கில் நிறுத்துவேன் என்ற தனது கருத்தையும் ஜோ பைடன் மறுக்கவில்லை.