2016-2021, 5 ஆண்டுகளில் இணையவழி வங்கி பரிவர்த்தனையில் ரூ.846.97 கோடி முறைகேடு: மத்திய நிதி அமைச்சகம்
2016 முதல் 2021 வரையிலான நிதி ஆண்டுகளில் ஏ.டி.எம், கிரெடிட் கார்டு மற்றும் இணையவழி வங்கி பரிவர்த்தனையின் போது 846.97 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஏடிஎம் மற்றும் இணையவழி வங்கி பரிவர்த்தனையின் போது முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா? என்றும் அதன் மொத்த மதிப்பு எவ்வளவு என குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய நிதித்துறை அமைச்சகம், "நாடுமுழுவதும், 2016-17ம் நிதி ஆண்டில் 45.56 கோடி ரூபாய் அளவுக்கு ஏ.டி.எம், கிரெடிட் கார்டு, இணையவழி வங்கி பண பரிவர்த்தனையின் போது முறைகேடு நடைபெற்று உள்ளது. இதேபோல், 2017-18 ம் ஆண்டில் 176.14 கோடி ரூபாயும், 2018-19ம் ஆண்டில் 177.88 கோடி ரூபாயும், 2019-20 ஆண்டில் 247.18 கோடி ரூபாயும் மற்றும் 2020-21 நிதி ஆண்டில் 200.21 கோடி ரூபாயும் முறைகேடு நடந்துள்ளது.
2016-2021 காலகட்ட நிதி ஆண்டுகளில் ஏ.டி.எம், கிரெடிட் கார்டு, இணையவழி வங்கி பரிவர்த்தனையின் போது மொத்தம் 846.97 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை 2016-17ம் நிதி ஆண்டில் 540 ஏ.டி.எம் மற்றும் இணையவழி வங்கி பரிவர்த்தனை முறைகேடு நடைபெற்றுள்ளது. இதன் மொத்த மதிப்பு 6.10 கோடி ஆகும். இதேபோல், 2017-18 ஆம் நிதி ஆண்டில் 4,082 ஏ.டி.எம், கிரெடிட் கார்டு, இணையவழி வங்கி பணபரிவர்த்தனை முறைகேடு நடைபெற்றுள்ளது எனவும், இதன் மொத்த மதிப்பு 51.01 கோடி ஆகும்;
இதேபோல் 2018-2019ம் நிதி ஆண்டில் 5,621 ஏ.டி.எம் மற்றும் இணையவழி வங்கி பரிவர்த்தனை முறைகேடு நடைபெற்றுள்ளது, இதன் மொத்த மதிப்பு 25.62 கோடி என்றும் 2019-2020 நிதி ஆண்டில் 7,461 ஏ.டி.எம், கிரடிட் கார்டு, இணையவழி வங்கி பரிவர்த்தனை முறைகேடு நடைபெற்றுள்ளது; இதன் மொத்த மதிப்பு 30.88 கோடி என மத்திய நிதி அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.
மேலும், 2020-2021 நிதி ஆண்டில் 5,659 ஏ.டி.எம் மற்றும் இணையவழி வங்கி பரிவர்த்தனை முறைகேடு நடைபெற்றுள்ளது; இதன் மொத்த மதிப்பு 16.08 கோடி எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 2016-2021 இடைப்பட்ட நிதி ஆண்டில் 97,367 ஏ.டி.எம் மற்றும் இணையவழி வங்கி பரிவர்த்தனை முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும் இதன் மொத்த மதிப்பு 256.45 கோடி ஆகும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications