சேலத்தில் திடீரென வீட்டை விட்டு வேகமாக ஓடிய அபிராமி.. பின்னாடியே போன புதுமாப்பிள்ளை.. நொடியில் சோகம்
சேலம்: சேலத்தில் திருமணமான 3 மாதத்தில் கணவனுடனான சண்டையில் மனம் உடைந்த புதுப்பெண், திடீரென வீட்டை விட்டு வேகமாக ஓடிச்சென்று அருகில் இருந்த கிணற்றில் குதித்தார். அவர் பின்னாடியே ஓடிவந்த கணவனும் கிணற்றில் குதித்தார். இருவருமே அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
குடும்ப சண்டையில் சில நொடிகளில் எடுக்கும் தவறான முடிவு வாழ்க்கையை ஒன்றும் இல்லாமல்செய்து விடுகிறது. சேலத்தில் மனைவியின் ஒரு நொடி கோபம், கணவன், மனைவி இருவரையுமே அழித்துவிட்டது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மாரியம்மன் புதூரை சேர்ந்த 27 வயதாகும் அருள்முருகன் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கும், சந்திரபிள்ளைவலசு சமத்துவபுரத்தை சேர்ந்த 19 வயதாகும் அபிராமி என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்கள் ஏற்பாட்டில் கல்யாணம் நடந்தது. கடந்த 3 மாதங்களாக மகிழ்ச்சியுடன் சென்ற வாழ்க்கை நேற்று இரவே முடிவுக்கு வந்தது.
நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் முற்றவே, மனம் உடைந்த அபிராமி , திடீரென கணவனிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினார். கண் இமைக்கும் நேரத்தில் வீட்டுக்கு அருகில் உள்ள விவசாய கிணற்றில் குதித்திருக்கிறார்
அப்போது பின்னால் ஓடி வந்த அருள்முருகன் கிணற்றில் மனைவி குதித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மனைவியை காப்பாற்றுவதற்காக அவரும் கிணற்றில் குதித்தார். கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்து கிணற்றில் குதித்ததை கண்டு அந்த பகுதியில் உள்ளவர்களும், அருள்முருகன் குடும்பத்தினரும் ஓடி வந்தார்கள்.
இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்துக்கு பின் கிணற்றுக்குள் இருந்து கணவன்-மனைவி இருவரையும் பிணமாக மீட்டனர். பின்னர் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
புதுமண தம்பதி இறந்த சம்பவம் தொடர்பாக வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அபிராமி குதித்த கிணறு 100 அடி ஆழமானது. சுமார் 10 அடிதான் தண்ணீர் இருந்திருக்கிது. எனவே கிணற்றின் மேலே இருந்து குதித்ததால் அபிராமியின் தலை கிணற்றின் பாறை பகுதியில் மோதியதில் அவர் இறந்துள்ளார். அருள்முருகனும் கிணற்றில் பாறையில் மோதிதான் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
அருள்முருகன்-அபிராமி தம்பதிக்கு திருமணம் ஆகி 3 மாதங்கள் ஆவதால் சேலம் உதவி கலெக்டர் அம்பாயிராம் விசாரணை நடத்தி வருகிறார்.
புதுமண தம்பதி கிணற்றில் குதித்து இறந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications