சேலத்தில் உத்தர பிரதேச டூரிஸ்ட்களுடன் மோதல்.. தமிழக போலீசார் 3 பேர் அதிரடியாக சஸ்பெண்ட்!
சேலம்: சேலம் ஏற்காடு அருகே காரைக்காடு பகுதியில் சுற்றுலா வந்திருந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 போலீசார் காயமடைந்திருந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே காரைக்காடு பகுதியில் சோதனை சாவடி உள்ளது. தமிழ்நாடு கர்நாடக எல்லைப்பகுதியான மேட்டூர் காரைக்காடு சோதனை சாவடியில் வழக்கம்போல் கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனைச் சாவடியில் உத்தர பிரதேசத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மாதேஸ்வரன் மலைக்கு செல்வதற்காக வருகை தந்திருந்தனர்.

அப்போது காரைக்காடு சோதனைச்சாவடியில் இருந்த காவல்துறையினர், உத்தர பிரதேச சுற்றுலாப்பயணிகள் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் சுற்றுலா பயணிகள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மதுபோதையில் இருந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இந்த வாக்குவாதம் மோதலாக மாறியது.
போலீசாரும் மதுபோதையில் இருந்த சுற்றுலா பயணிகளும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் 2 போலீசார் காயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய 2 குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணையில், போலீசார் இந்த விவகாரத்தில் முறையாக கையாளவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், காரைக்காடு மோதல் நிகழ்வை முறையாக கையாளாத காவலர்கள் 3 பேரை, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். காரைக்காடு சோதனைச்சாவடியில் பணியாற்றிய காவலர்கள் செந்தில்குமார், சுகவனேஸ்வர், முத்தரசன் ஆகிய 3 பேரையும் இடைநீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
மோதலில் 2 காவலர்கள், சுற்றுலா பயணிகள் காயமடைந்துள்ளனர். இந்த மோதல் சம்பவத்தை எப்படியாவது தடுத்திருக்க வேண்டும் என்றும், உயர் அதிகாரிகள் ஆரம்பத்திலேயே தகவல் தெரிவித்து இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications