இது கிட்னி திருட்ட விட மோசமா இருக்கே! 9 நாள் குழந்தை 1 லட்சம்! சேலத்தை சில்லிட வைத்த குழந்தை விற்பனை
சேலம்: சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே பிறந்து 9 நாளேயான பெண் குழந்தையை பெற்றோர்கள் ரூபாய் 1,20,000 விற்பனை செய்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை விற்பனை தொடர்பாக, சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் குழந்தையின் பெற்றோர்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாண்டி ஒன்றியம் இராமாபுரம் ஆஞ்சநேயர் கோவில் ரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் - சிவகாமி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 9 ந்தேதி பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் சந்தோஷ் இவரது மனைவி சிவகாமி ஆகியோர் கடந்த 14ந்தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாக மருத்துவ அறிக்கை ஒன்றை கேட்பவர்களிடம் காண்பித்து வந்துள்ளனர்.

சேலம் குழந்தை விற்பனை
இந்நிலையில் சந்தோஷ் - சிவகாமி தம்பதியினர் தனக்கு பிறந்த 9 நாட்களான இரண்டாவது பெண் குழந்தையை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியாவிற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் படி மாவட்ட குழந்தைகளின் உதவி மைய வழக்குப் பணியாளர் மூலமாக காவல் கட்டுப்பாட்டு அறை அவசர உதவி எண் 100க்கு தகவல் அளிக்கப்பட்டது.
குழந்தை கடத்தல்
அதன் பேரில் மகுடஞ்சாவடி காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் படி கடந்த 20 ஆம் தேதி போலீசார் குழந்தைகளின் பெற்றோர் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்ததில் வீடு பூட்டியிருந்துள்ளது. மேலும் அருகில் வசித்து வருபவர்களிடம் விசாரித்ததில் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்து பெற்றோர்கள், தேவராஜ் என்பவர் மூலம் ரஞ்சித் என்பவருக்கு குழந்தையை சட்ட விரோதமாக கடந்த 14ஆம் தேதி விற்றது உண்மை என போலீசாருக்கு தெரிய வந்தது.
பெற்றோர் கைது
அதன் பேரில் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனலட்சுமி (பொ) கொங்கணாபுரம், எஸ்ஐ மல்லிகா ஆகியோர் சந்தோஷ், சிவகாமி, தேவராஜ், ரஞ்சித் ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகுடஞ்சாவடி அருகே பெற்ற குழந்தையே பெற்றோர்கள் விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோத தத்தெடுப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சட்ட விரோத குழந்தை விற்பனை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஏழ்மையான தொழிலாளிகளை குறிவைத்து அவர்களுக்கு பணம் தருவதாக கூறி புரோக்கர்கள் குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையில் குழந்தைகளை சட்டபூர்வமாக மட்டுமே தத்து கொடுக்க வேண்டும். அதற்கும் ஏராளமான நடைமுறைகள் இருக்கிறது. சட்ட விரோத குழந்தை விற்பனையில் ஈடுபட்டால், குழந்தைகளை வாங்குவது விற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கின்றனர் போலீசார்.












Click it and Unblock the Notifications