அம்மிகல்லை தூக்கிய மணிமேகலை.. புருஷன் மீது ஒரேபோடு.. விடிய விடிய காத்திருந்து.. மிரண்ட சேலம் போலீஸ்
சேலம்: தினமும் மது அருந்துவிட்டு நடத்தையில் சந்தேகப்பட்டதால், தலையில் அம்மிக்கல்லை போட்டு புருஷனை கொலை செய்த பெண்ணை சேலம் போலீசார் கைது செய்தனர்.
மது பழக்கம் குடும்பத்தில் குழப்பத்தை மட்டுமல்ல, கொடூரமான நிலையை ஏற்படுத்தி வருகிறது. மது அருந்துவோரின் குடும்பத்தில் தினமும் சண்டைகள், சச்சரவுகள் நடைபெறுவது சர்வசாதாரணமாகிவிட்டது.

உச்சகட்ட மதுபோதையில் மனைவியை கணவன் துன்புறுத்துவதும் அடிக்கடி நடக்கிறது. இதனால் கொலைகளும், வன்முறைகளும் நடக்கிறது. மது என்ற அரக்கன் புகுந்த வீடுகள் நிம்மதியை தொலைத்து வருகின்றன. அப்படித்தான் சேலத்தில் ஒரு குடும்பத்தில் கணவனின் மதுபழக்கம் அங்கு உயிரையே காலி செய்துள்ளது.
சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டியை சேர்ந்த 35 வயதாகும் ரமேஷ், சேலம் ரயில்வே ஸ்டேசனில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி மணிமேகலை (27). இவரும் சேலம் ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்
இந்த தம்பதிக்கு வெற்றிவேல் என்ற மகனும், நந்தினி என்ற மகளும் உள்ளனர்.
ரமேஷ் தினமும் மது அருந்தும் பழக்கம் உள்ளவராம். அவர் அடிக்கடி மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்தாராம். அத்துடன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை தினமும் அடித்து துன்புறுத்தி வந்திருக்கிறார். தற்போது கோடை விடுமுறையையொட்டி குழந்தைகள் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பே அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
அப்படித்தான் முன்தினம் இரவு ரமேஷ், மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் வழக்கம் போல் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையேவ வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ரமேஷ், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்தி உள்ளார்.
அடிக்கடி தன்னை துன்புறுத்துவதால் ஆத்திரம் அடைந்த மணிமேகலை, வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து போதையில் படுக்கையில் கிடந்த ரமேசின் தலையில் போட்டார். மீண்டும் அதே கல்லால் அவருடைய முகத்தில் தாக்கி உள்ளார. இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
பின்னர், கொலை செய்யப்பட்ட கணவரின் உடல் அருகேயே விடிய, விடிய மணிமேகலை உட்கார்ந்திருந்துள்ளார். நேற்று காலை மணிமேகலை, சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் சென்று, போலீசாரிடம் தனது கணவரை தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்துள்ளார். இதையடுத்து சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த ரமேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதைத்தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக போலீசார் மணிமேகலையை போலீசார் கைது செய்தார்கள்.












Click it and Unblock the Notifications