அதிமுக பிரமுகர்களுக்கு இப்படி ஒரு பிரச்னை.. ஆஃப்பாயிலில் பெப்பர் அதிகம்- ஹோட்டலை நொறுக்கி அட்டகாசம்!
சேலம் : அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே பெரும் போட்டி நிகழ்ந்து வரும் நிலையில், சேலத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் 4 பேர், ஆஃப்பாயிலில் பெப்பர் தூக்கலாக இருந்ததால் சண்டை போட்டு ஹோட்டலை சூறையாடியுள்ளனர்.
Recommended Video
சேலம் ஆத்தூர் அருகே ஆஃப்பாயிலில் பெப்பர் அதிகமாக இருப்பதாக கூறி தகராறு செய்த குடிபோதை ஆசாமிகள் ஹோட்டல் மாஸ்டர் மற்றும் உரிமையாளரை தாக்கினர்.
ஹோட்டல் உரிமையாளரை தாக்கி, ஹோட்டலை சூறையாடிய அதிமுக பிரமுகர்கள் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் கெங்கவல்லி போலீசார்.
தலைமறைவான அந்த நான்கு பேரையும் கெங்கவல்லி போலீசார் தேடி வரும் நிலையில், ஹோட்டலில் அவர்கள் தகராறு செய்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பாலூட்டி வளத்த கிளி! இவங்க சண்டை ஓயாது.. நம்ம 'அங்கேயே’ போவோம்! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பக்கா மூவ்!
ஹோட்டலில் ஆஃப்பாயில்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கெங்கவல்லி மெயின் ரோட்டில் குமரேசன் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது கடைக்கு கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த 4 பேர் குடிபோதையில் வந்துள்ளனர். அவர்கள் 4 பேரும் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஆஃப்பாயில் கேட்டுள்ளனர். ஹோட்டல் மாஸ்டரும் ஆஃப்பாயில் போட்டு கொடுத்துள்ளார்.
பெப்பர் தூக்கலாக இருந்ததால் தகராறு
அந்த ஆஃப்பாயில் ஒழுங்காக போடவில்லை என்றும், பெப்பர் அதிகமாக உள்ளது என்றும் கூறி அவர்கள் நால்வரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் குமரேசன் கேட்டபோது அவரையும் கடையில் இருந்த ஊழியர்களையும் அவர்கள் தாக்கியுள்ளனர். பின்னர் கடையில் இருந்த மாவு, முட்டைகளை கீழே தள்ளிவிட்டு, கடையையே சூறையாடியுள்ளனர்.
சிசிடிவி காட்சி
இச்சம்பவம் குறித்து ஹோட்டல் உரிமையாளர் குமரேசன் கெங்கவல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளனர். குடிபோதையில் இருந்த நபர்கள் ஹோட்டல் மாஸ்டர் மற்றும் உரிமையாளரை தாக்கியது வீடியோவில் பதிவான காட்சி மூலம் தெரியவந்தது.
4 பேர் மீது வழக்குப்பதிவு
இதனையடுத்து ஆஃப்பாயிலுக்காக குடிபோதையில் ஹோட்டலை சூறையாடிய அதிமுக பிரமுகர்களான பிரவீன், பிரபு, கெளதம், நடராஜ் ஆகிய 4 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவர்களைத் தேடி வருகின்றனர். இவர்கள் 4 பேர் மீதும் ஏற்கனவே கெங்கவல்லி பேரூராட்சி தலைவர் மகனை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.