பாஜக..இருந்திருந்தால் போயிருந்தால் என்பதெல்லாம் கவலை இல்லை? எஸ்பி வேலுமணி குறித்து எடப்பாடி பளீச்..!
சேலம்: மக்களவைத் தேர்தலில் திமுக, பாஜகவை விட அதிமுகதான் அதிக வாக்குகளை பெற்றுள்ளது எனவும், தனக்கும் எஸ்பி வேலுமணிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேர்தல் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. ஒரு இடத்தில் கூட அந்த கட்சி வெற்றி பெற முடியாமல் போனது. சில இடங்களில் டெபாசிட் இழந்ததோடு மூன்றாம் இடத்துக்கும் தள்ளப்பட்டது.

இந்த நிலையில் சேலம் பகுதியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்வி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதன்முறையாக இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”மக்களவைத் தேர்தலில் திமுக பாஜகவை விட அதிமுக தான் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது. 2019-ல் பெற்ற வாக்குகளை விட 2024 தேர்தலில் அதிமுக அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது. மற்ற கட்சிகளுக்காக பல தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர் ஆனால் அதிமுகவுக்காக நான் மட்டுமே தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
பிரதமர் நரேந்திர மோடி கூட எட்டு முறை தமிழ்நாட்டுக்கு வந்தும் பாஜக வெற்றி பெற முடியவில்லை. பாஜக வளர்ந்து விட்டது போல திட்டமிட்டு செய்திகள் வெளியிடப்படுகின்றன. திமுகவினருக்காக அவர்கள் கூட்டணி கட்சியினர் பரப்புரையில் ஈடுபட்டனர். பாஜகவுக்காக நட்டா, அமித் ஷா என பலரும் தமிழ்நாட்டில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
ஆனால் 2014 தேர்தலுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி 0.62 சதவீத வாக்குகளை 2024ல் பெற்றிருக்கிறது. திமுக 2019ல் பெற்றதை விட 6.59 சதவீதம் குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறது. ஆனால் சசிகலா ஓபிஎஸ் டிடிவி தினகரன் ஆகிய யாரும் இல்லாமலேயே சுமார் ஒரு சதவீத வாக்கை அதிமுக தனியாக பெற்றிருக்கிறது. ஆனால் ஊடகங்கள் அதிமுக வாக்குகள் வேறு கட்சிக்கு சென்று விட்டதாக செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.
இப்போது பாஜக அதிமுக கூட்டணி இருந்திருந்தால் 35 இடம் வரை வந்திருக்கலாம் என எஸ்பி வேலுமணி கூறியிருக்கிறாரே என எடப்பாடி பழனிச்சாமி இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதில் அளித்த அவர்,” இருந்திருந்தால் போயிருந்தால் என்பதெல்லாம் கவலை இல்லை.. சூழலுக்கு ஏற்ப கூட்டணி.. ஆனால் அதிமுக தோற்றத்திற்கு பாஜக கூட்டணி இல்லாததற்கு காரணம் என சொல்லி இருக்க மாட்டார். அவர் பேசியதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டிருக்கின்றன. அவருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை சாதாரண ஒரு நிகழ்வை இவ்வளவு பெரிய பிரச்சனை போல எழுப்பி விவாதம் நடத்த வேண்டிய அவசியம் என்ன?”என கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications