"எதையும் விடாத.." எடப்பாடி புறப்பட்ட அடுத்த நொடி காலியான மோர் பந்தல்.. தொண்டர்கள் செய்ததுதான் ஹைலைட்
சேலம்: சேலம் சூரமங்கலத்தில் நீர், மோர் பந்தலை இன்று எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். எடப்பாடி பழனிசாமி பங்கேற்றதால், இளநீர், மாம்பழங்கள், அண்ணாச்சி பழம் என பழங்கள், இளநீர், நுங்குகள் வரிசையாக கட்டி தொங்க விடப்பட்டு இருந்தது. எடப்பாடி அங்கிருந்து கிளம்பியது தான் தாமதம், அங்கிருந்த தொண்டர்கள் செய்த செயல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக மே மாதத்தில் வாட்டி வதைக்கும் வெப்பம் இந்த ஆண்டு ஏப்ரல் துவக்கத்தில் இருந்தே உக்கிரம் காட்டி வருகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே சென்று விட்டு வருவதற்குள் வியர்வையில் ஒரு குளியல் போட்ட மாதிரி அளவுக்கு வெப்பம் வதைத்துக்கொண்டு இருக்கிறது.

வரும் நாட்களில் வெப்பம் இன்னும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் எப்படி சமாளிக்க போகிறோமோ என தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி பொது இடங்களில் நீர் மோர் பந்தல்களை திறக்க வேண்டும் அரசியல் கட்சிகள், கட்சி நிர்வாகிகளுக்கு வலியுறுத்தி வருகின்றன.
அந்த வகையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் நலன் கருதி அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைத்து உதவி செய்ய முன்வர வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதன்படி, சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சூரமங்கலம் உழவர் சந்தை எதிரில் நீர் - மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு மோர், கம்மங்கூழ், இளநீர், தர்பூசணி, நுங்கு, வெள்ளரிக்காய், சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை போன்றவற்றை வழங்கினார்.
இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். எடப்பாடி பழனிசாமி பங்கேற்றதால், இளநீர், மாம்பழங்கள், அண்ணாச்சி பழம் என பழங்கள், இளநீர், நுங்குகள் வரிசையாக கட்டி தொங்க விடப்பட்டு இருந்தது. எடப்பாடி பழனிசாமி நீர், மோர் பந்தலை திறந்து வைத்து விட்டு கிளம்பியதும் தான் தாமதம்... அப்படியே பழங்களை கட்சி தொண்டர்கள் அள்ளி சென்றனர்.
அதிலும் பழங்களை ஒன்னு ஒன்னாக எடுத்தால் தாமதம் ஆகும் எனக் கருதி... மொத்தமாக பழங்களை தொங்க விட்டு இருந்த கூடையோடு அள்ளி சென்றதுதான் ஹைலைட். சிலநிமிடங்களில் பழங்கள், இளநீர் எல்லாம் காலியாகி நீர் மோர் பந்தலில் வெறும் நீர் மட்டுமே மிச்சம் இருக்கும் அளவுக்கு இடம் மாறிவிட்டது. வெயிலில் கஷ்டப்பட்டு நின்றதற்கு பழங்களாவது கிடைத்ததே என பழங்களை அள்ளி சென்ற தொண்டர்கள் பேசிக்கொண்டே சென்றதையும் பார்க்க முடிந்தது.












Click it and Unblock the Notifications