சேலம் மத்திய சிறையில் சாக்கடையில் பிளாஸ்டிக் கவரில் என்ன அது? யார் அந்த கைதி? தீவிர விசாரணை
சேலம்: இந்தியாவில் உள்ள பழமையான சிறைகளில் சேலம் சிறைச்சாலையும் ஒன்று. சுமார் 115 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையை கட்டும் போதே ஆங்கிலேயர்கள் பாதுகாப்பை மையமாகக் கொண்டு வடிவமைத்தார்கள். கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் யாரும் எளிதில் ஏற முடியாத உயர்ந்த மதில் சுவர்கள் உள்ளன. இங்கு ஒரு சாக்கடையில் இருந்த பிளாஸ்டிக் கவரில் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதுபற்றி பார்ப்போம்.
சேலம் மத்திய சிறையை பொறுத்தவரை ஆங்கிலேயர் காலத்தில் 1862 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு பழமையான சிறைச்சாலை ஆகும். : இது சுமார் 115 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. தமிழகத்தின் தூய்மையான மற்றும் சிறப்பாகப் பராமரிக்கப்படும் சிறைகளில் ஒன்றாக சேலம் மத்திய சிறை இருந்து வருகிறது.

இங்கு கைதிகளின் வருகை, மருத்துவக் குறிப்புகள் மற்றும் தண்டனை விவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறையில் தண்டனை விசாரணை கைதிகள் சுமார் 1200 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சில கைதிகளிடம் செல்போன் புழக்கம் இருந்து வருகிறது.
கடந்த மூன்று மாதமாக தொடர்ந்து சிறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 15க்கும் மேற்பட்ட செல்போன்கள் சிக்கியது.இந்த செல்போன்களை கைதிகளுக்கு கொண்டு சென்று கொடுத்த சிறை வார்டனை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் சிறையில் தினமும் சிறை கண்காணிப்பாளர் வினோத் உத்தரவின் பேரில் சோதனை காவலர்கள் செல்போன் புழக்கம் பற்றி விசாரித்து சோதனையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மத்திய சிறையின் 9 மற்றும் 10வது பிளாக் இருக்கும் இடைப்பட்ட பகுதியில் செல்லும் சாக்கடை கால்வாய் பகுதியில் காவலர்கள் சோதனை நடத்தினர்.அப்போது சாக்கடையின் மீது ஓரமாக ஒரு பிளாஸ்டிக் கவர் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. அதனை எடுத்து பிரித்து பார்த்த போது ஒரு செல்போன் இருந்தது. அந்த செல்போனை யாரோ சாக்கடைக்குள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

ஒன்பது மற்றும் பத்தாவது பிளாக்கில் தண்டனை, விசாரணை கைதிகள் அடுத்தடுத்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் யார் அந்த செல்போனை பதுக்கி வைத்தார்கள் என சிறை கண்காணிப்பாளர் வினோத் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை வருகின்றனர். தொடர்ந்து சிறைக்குள் செல்போன் சிக்கி வரும் நிலையில் மீண்டும் ஒரு செல்போன் சிக்கி இருக்கும் இந்த சம்பவம் சிறை கைதிகள், காவலர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications