எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! சேலத்தில் பரபரப்பு! போலீசார் குவிப்பு
சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இல்லத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து சூரமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கெனவே கடந்த மாதமும் இதேபோல எடப்பாடி பழனிசாமியின் சேலம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது இப்போதும் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. மிரட்டலை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக கடந்த மாதம் சரியாக இதே 25ம் தேதி சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்திருந்தது. அதில், சென்னையில் எடப்பாடி பழனிசாமி வசித்து வரும் அரசு பங்களாவுக்கும், அவர் சட்டசபை செல்லும் வழியிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து பங்களாவிலும், சட்டசபை செல்லும் வழியிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. எனவே மிரட்டல் வெறும் புரளி என்று தெரிய வந்தது.
கடந்த மாதம் மிரட்டல் விடுக்கப்பட்டதை போல இந்த மாதமும் சரியாக 25ம் தேதி மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மிரட்டல் விடுத்த நபர் யார்? கடந்த மாதம் மிரட்டல் விடுத்த நபரும், இந்த முறை மிரட்டல் விடுத்தவரும் ஒருவர்தானா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications