கோடநாடு.. ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விசாரணை நிறைவு.. “போன் ஆதாரம்”.. 5 பேருக்கு ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி!
செல்போன் உரையாடல் ஆதாரங்களை வைத்து ஐந்து பேரை சிபிசிஐடி போலீசார் அடையாளம் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் : கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் டிரைவர் கனகராஜ் மரணம் தொடர்பாக சேலம் முன்னாள் எஸ்.பி ராஜனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஏற்கனவே ஐபிஎஸ் அதிகாரி முரளி ரம்பாவிடம் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தியது.
இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது சிபிசிஐடி போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக சேலத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோடநாடு சம்பவம்
ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அப்போது முக்கிய ஆவணங்களும், பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டன. மேலும், பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய நபரான ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 2017 ஏப்ரல் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

கார் டிரைவர் கனகராஜ்
அதேபோல் மற்றொரு டிரைவரான சயான் சென்ற கார் கேரளாவில் விபத்துக்குள்ளானது. இதில் சயான் மனைவி, மகள் இறந்தனர். சயான் காயத்துடன் உயிர்தப்பினார். கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இப்படி கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் அடுத்தடுத்து மர்ம மரணங்கள் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சிபிசிஐடி விசாரணை
கோடநாடு கொலை கொள்ளை குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. தனிப்படை போலீசார் 316 பேரிடம் நடத்திய விசாரணையில் பெற்ற வாக்குமூலம் மற்றும் 3,600 பக்க குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

கனகராஜ் மரணத்தில் சந்தேகம்
அப்போதைய சேலம் சரக டிஐஜி செந்தில்குமார், கார் ஓட்டுநர் கனகராஜ், சாலை விபத்தில் தான் இறந்தார், அவர் மது அருந்தியிருந்தார் எனத் தெரிவித்திருந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், கனகராஜ் சாலை விபத்தில் இறக்கவில்லை என்றும், கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் உள்ளிட்ட உறவினர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் கார் ஓட்டுநர் கனகராஜ் மர்ம மரணம் தொடர்பாக டிஎஸ்பி ஒருவர் தலைமையில் சிபிசிஐடி போலீசார்தனி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐபிஎஸ் அதிகாரிகளிடம்
கனகராஜ் மரணம் நிகழ்ந்த அன்று அங்கு பொறுப்பில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக இதுவரை விசாரணை செய்யப்படாமல் இருந்த ஐபிஎஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நிறைவடைந்துள்ளது. சேலம் முன்னாள் எஸ்.பி ராஜனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். முன்னதாக ஐபிஎஸ் அதிகாரி முரளி ரம்பாவிடம் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வளையத்தில் 5 பேர்
செல்போன் உரையாடல் ஆதாரங்களை அடிப்படையாக வைத்து ஐந்து பேரை சிபிசிஐடி காவல்துறையினர் அடையாளம் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடநாடு கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களிடம் நீண்ட நேரம் செல்போனில் உரையாடியதாகச் சந்தேகிக்கப்படும் அந்த ஐந்து நபர்களிடமும் சிபிசிஐடி விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications