விபத்தா.. கொலையா? ஜெயலலிதா டிரைவர் கனகராஜ் பலியான இடத்தில் சிபிசிஐடி ஆய்வு! சூடுபிடிக்கும் கோடநாடு!
சேலம் : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் மர்ம மரணம் தொடர்பாக ஆத்தூர் அருகே புறவழிச்சாலையில் விபத்து நடந்த பகுதியில் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். இதனால், இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.
கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சேலம் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழக்கவில்லை, அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என கனகராஜின் சகோதரர் உள்ளிட்டோர் விசாரணையில் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே இந்த வழக்கு சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவுக்குமாற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று ஆத்தூர் சென்று கனகராஜ் பலியான விபத்து நடந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
தீவிரமான கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. சிபிஐ எஸ்பி முரளி ரம்பாவுக்கு சம்மன்.. எஸ்ஐடி அதிரடி! ஏன்?
கோடநாடு சம்பவம்
ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அப்போது முக்கிய ஆவணங்களும், பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டன. மேலும், பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய நபரான ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 2017 ஏப்ரல் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.
கார் டிரைவர் கனகராஜ்
அதேபோல் மற்றொரு டிரைவரான சயான் சென்ற கார் கேரளாவில் விபத்துக்கு உள்ளானது. இதில் சயான் மனைவி, மகள் இறந்தனர். சயான் காயத்துடன் உயிர்தப்பினார். கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். கோடநாடு கொலை கொள்ளை குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
சிபிசிஐடி விசாரணை
கடந்த செப்டம்பர் மாதம், கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. தனிப்படை போலீசார் 316 பேரிடம் நடத்திய விசாரணையில் பெற்ற வாக்குமூலம் மற்றும் 3,600 பக்க குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வு குழுவினர் 2 வாகனங்களில் நேற்று சேலம் மாவட்டம் ஆத்தூர் வந்தனர். ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கிய ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை சந்தனகிரி பிரிவு ரோடு பகுதியை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கனகராஜ் மரணத்தில் சந்தேகம்
அப்போதைய சேலம் சரக டிஐஜி செந்தில்குமார், கார் ஓட்டுநர் கனகராஜ், சாலை விபத்தில் தான் இறந்தார், அவர் மது அருந்தியிருந்தார் எனத் தெரிவித்திருந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், கனகராஜ் சாலை விபத்தில் இறக்கவில்லை என்றும், கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் உள்ளிட்ட உறவினர்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கார் ஓட்டுநர் கனகராஜ் மர்ம மரணம் தொடர்பாக சாலை விபத்து நடந்த இடத்தில் எஸ்.பி. மாதவன் தலைமையில் சிறப்பு புலனாய்வு போலீசார் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விபத்தா? திட்டமிட்டு கொலையா?
அப்போது, கனகராஜ் ஆத்தூர் புறவழிச் சாலையில் எங்கிருந்து எந்தப் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்? ஆத்தூர் சக்திநகர் பகுதியில் உள்ள அவரது பெரியம்மா சரஸ்வதி வீட்டுக்கு கனகராஜ் அடிக்கடி வந்து செல்வாரா? கனகராஜ் விபத்தில் சிக்கிய பகுதி அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியா? அவர் மோட்டார் சைக்கிளில் சென்றதை பார்த்தவர்கள் யார்? மோட்டார் சைக்கிளில் செல்லும்போது மது அருந்தி இருந்தாரா? அவர் இறந்தது விபத்திலா? அல்லது விபத்து ஏற்படுத்தப்பட்டு இறந்தாரா? என்பன குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.
மீண்டும் சூடுபிடித்த விசாரணை
அந்த பகுதியில் உள்ள கடைக்காரரிடமும் விசாரணை நடத்தினர். மேலும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையின் போது கிடைத்த தகவல்களை பதிவு செய்து கொண்டனர். கனகராஜ் இறந்தது தொடர்பாக ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆவணங்களையும் வாங்கி சென்றனர். கனகராஜ் இறந்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கனகராஜ் மர்ம மரண விவகார மீண்டும் சூடுபிடித்துள்ளது.