கட்சிக்கொடிகள் இல்லை... தோரணங்கள் இல்லை... வரவேற்பு பதாகைகள் இல்லை.. வியப்பை தந்த முதல்வரின் டூர்..!
சேலம்: சேலம், தருமபுரி என கடந்த இரண்டு நாட்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டிருக்கும் சூழலில், அவர் செல்லும் வழிகளில் எவ்வித படோடாபமும் இல்லாமல் எளிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கட்சிக்கொடிகள், தோரணங்கள், வரவேற்பு பதாகைகள் என எதையுமே முதலமைச்சர் செல்லும் வழிதடங்களில் காண முடியவில்லை.
அதேபோல் மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தனது பயணத்திட்டத்தை அமைக்க வேண்டாம் என்பதும் முதலமைச்சரின் முக்கிய அறிவுரைகளில் ஒன்றாகும்.

முதலமைச்சர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை மக்களை அடிக்கடி சந்திக்க விரும்புபவர். வெறுமனே சென்னையில் உட்கார்ந்து கொண்டு கோப்புகளில் கையெழுத்திடுவதை மட்டுமே தனது பணியாக கொள்ளாமல் தமிழகமெங்கும் டூர் செல்ல வேண்டும், அதன்மூலம் மக்களையும், கட்சிக்காரர்களையும் சந்திக்க வேண்டும் என எண்ணுபவர். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் பயணம் செல்ல சலிக்காதவர்.

ஆர்வமிகுதி
அந்த வகையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மாவட்ட வாரியாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகிறார். இந்நிலையில் வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக நேற்று சேலம் சென்ற முதலமைச்சருக்கு, ஆடம்பர வரவேற்பு அளிக்கப்படவில்லை. தலைவா வருக, முதல்வரே வருக, என கட்சியினர் ஆர்வமிகுதியில் வரவேற்பு பதாகைகள் வைப்பது வழக்கம். இது தான் தமிழக அரசியலில் காலம் காலமாக உள்ள நடைமுறை. ஆனால் அதனை உடைத்தெறிந்து மிக யதார்த்தமாக தனது பயணத்திட்டத்தை அமைத்துக்கொண்டார் ஸ்டாலின்.

பேனர் கலாச்சாரம்
கடந்த அதிமுக ஆட்சியின் போது பேனர் சரிந்து சென்னையிலும், கோவையிலும், இரண்டு உயிர்கள் பலியானதை தொடர்ந்து கட்சியினர் பேனர் கலாச்சாரத்தை கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால் அதனை மீறி கட்சிக்காரர்கள் ஆங்காங்கு பேனர் வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில் தான் பேனர் விவகாரத்தில் தலைமையின் உத்தரவை மீறி நடந்தால் கடும் நடவடிக்கைக்கு ஆளாவீர்கள் என ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்தார்.

யதார்த்தம்
இப்போது ஓரளவு திமுகவினருக்கு இது குறித்த புரிதல் ஏற்பட்டுவிட்டது. இதனால் பேனர் வைப்பதை விடுத்து ஆரோக்கியமான முறையில், பிறருக்கு பயன்பெறக் கூடிய வகையில் புத்தகங்களை முதலமைச்சருக்கு பரிசாக கொடுத்து வரவேற்றிருக்கிறார்கள். நேற்று சேலத்தை தொடர்ந்து இன்று தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள முதலமைச்சருக்கு அங்கு எளிய முறையிலேயே வரவேற்பு தரப்பட்டது. ஆடம்பரங்களை கட்சியினர் கைவிட்டு யதார்தத்தை உணரத் தொடங்கியதால் முதல்வரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications