முதல்வர் பழனிச்சாமி பணம் கொடுத்தாரா... எந்த புகாரும் வரவில்லை.. சேலம் கலெக்டர் ரோகிணி பேட்டி
Recommended Video
சேலம்: வாக்கு சேகரித்த போது தமிழக முதல்வர் பழனிச்சாமி பெண் ஒருவருக்கு பணம் கொடுப்பது போன்ற வீடியோ பரவிய நிலையில், முதல்வர் பணம் கொடுத்ததாக எந்த புகாரும் தனக்கு வரவில்லை என சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ரோகிணி விளக்கம் அளித்துள்ளார்.

சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து வீதி வீதியாக சென்று நேற்று முதல்வர் பழனிச்சாமி வாக்கு சேகரித்தார், சேலம் சந்தை பகுதியில் வாக்கு சேகரித்த போது ஒரு பெண்ணுக்கு முதல்வர் பணம் கொடுப்பது போன்ற வீடியோ பரவியது.
இதற்கு பணம் வாங்கியதாக கூறப்படும் பெண் மறுப்பு தெரிவித்தார். அந்த பெண் ஓட்டு கேட்ட முதல்வருக்குத் தன் கடையிலிருந்து வாழை சீப் ஒன்றை எடுத்து வழங்கி உள்ளாராம். முதலில் அதை மறுத்த முதல்வர் பின்னர் அந்த வாழை சீப்பை காசு கொடுத்து வாங்கிக்கொண்டாராம்.
இந்நிலையில் நாளை மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வையிட்ட, சேலம் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ரோகிணி, இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "வாக்கு சேகரிப்பில் பெண்ணுக்கு முதல்வர் பணம் கொடுத்ததாக எந்த புகாரும் எனக்கு வரவில்லை. எனினும் ஊடகங்களில் வெளியான தகவலை வைத்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பி உள்ளோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் கைது செயய்ப்பட்டுள்ளதால் தேர்தலுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications