எவன் எவனோ கட்சி ஆரம்பிக்கிறான்.. சினிமாவில் நடித்து நலத்திட்டம் செய்தால் அரசியலா? ஆர்எஸ்.பாரதி பரபர!
சேலம்: எவன் எவனோ கட்சி ஆரம்பிக்கிறான். ஒரு நலத் திட்டம் செய்துவிட்டு, நாலு சினிமாவில் நடித்துவிட்டு, 2 மன்றங்களை ஆரம்பித்து விட்டால் உடனே ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடுகிறது என பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், "திமுக எனும் பேரியக்கத்தின் வரலாற்றை நாம் சொல்லியாக வேண்டும். அப்படி சொல்லாத காரணத்தால் தான் எவன் எவனோ கட்சி ஆரம்பிக்கிறான். ஒரு நலத் திட்டம் செய்துவிட்டு, நாலு சினிமாவில் நடித்துவிட்டு, 2 மன்றத்தை ஆரம்பித்து விட்டால் உடனே ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாட்டில் ஏற்படுகிறது என்று சொன்னால், அதற்குக் காரணம் நமது இயக்கத்தின் வரலாறை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லாதது தான்.
நம் தானைத் தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார். கருணாநிதி நூற்றாண்டு விழாவை நாம் நடத்துகிறோம் என்று சொன்னால் அது நம் கட்சியின் வரலாற்றைச் சொல்வதுதான். கருணாநிதி வரலாறு என்பது திராவிட இயக்கத்தின் வரலாறு. 50 ஆண்டு காலமாக தலைவராக இருந்து திமுகவை வழிநடத்தியவர் கருணாநிதி.

இன்று தலைமைக் கழகத்தை எடுத்துக்கொண்டால், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, நான் உள்ளிட்ட சிலர் தான் சீனியர்கள். நாங்கள் 3 பேரும் மிசாவில் சிறையில் இருந்தவர்கள். மிசா என்ற ஒன்று இருந்ததே சிலருக்குத் தெரியவில்லை. இந்த இயக்கத்தில் எப்படிப்பட்ட துன்பங்களை எல்லாம் நாம் அனுபவித்தோம் என்பதை நமது இளம் தலைமுறையினருக்கு தெரிந்தால் தான், அவர்கள் உடனே எந்தப் பதவியையும் எதிர்பார்க்க மாட்டார்கள்." எனப் பேசினார்.
நடிகர் விஜய், அரசியல் பிரவேசத்திற்குத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அண்மையில் தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில், நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்திய விஜய், அடுத்தகட்டமாக மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு விஜய்யை விமர்சிப்பதாக உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications