தேவர் குருபூஜை விழா.. தனி விமானத்தில் மதுரை புறப்பட்ட உதயநிதி ஸ்டாலின்.. உற்சாகத்தில் உடன்பிறப்புகள்
சேலம்: பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் கலந்துகொள்வதற்காக சேலத்தில் இருந்து தனி விமானம் மூலம் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு புறப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழாவும் 60-வது குருபூஜை விழாவும் நடைபெற்று வருகிறது. வழக்கம் போலவே இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவாகவும் அக்டோபர் 29ஆம் தேதி அரசியல் விழாவாகவும் இன்று அக்டோபர் 30ஆம் தேதி அரசு விழாவாகவும் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மரியாதை செலுத்தினர்.
ட்விட்டர் போனா என்ன? பராக் அகர்வால் பேஸ்புக் சிஇஓ ஆகணும்.. பிரபல தொழிலதிபர் ஐடியா! காரணத்தை கேளுங்க
மு.க.ஸ்டாலின் பயணம் ரத்து
முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட கடும் முதுகு வலி காரணமாக அவரை நீண்ட தூரம் பயணிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
உதயநிதி ஸ்டாலின் பயணம்
இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலாக அமைச்சர்கள் துரைமுருகன் தலைமையிலான முக்கிய அமைச்சர்கள் மரியாதை செலுத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அமைச்சர்கள் பசும்பொன் வந்து நேரில் மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பசும்பொன்னில் மரியாதை செலுத்துவதற்காக சேலத்தில் இருந்து புறப்பட்டுள்ளார்.
தனி விமானத்தில் பயணம்
கள்ளக்குறிச்சி பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலமாக சேலம் விமான நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து தனி விமானம் மூலம் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு புறப்பட்டுள்ளார். மதுரையில் இருந்து மீண்டும் கார் மூலமாக பசும்பொன் செல்லவுள்ளதாகவும், அவருடன் முக்கிய அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பயணிக்க உள்ளனர்.
முக்கியத்துவம் பெறும் உதயநிதி
அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து ஓபிஎஸ், அண்ணாமலை என முக்கிய நிர்வாகிகள் பசும்பொன்னிற்கு நேரடியாக சென்று மரியாதை செலுத்தியுள்ளனர். இதனால் திமுக சார்பாக அமைச்சர்கள் வந்திருந்தாலும், உதயநிதி ஸ்டாலின் நேரடியாக வருவது தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் வருகையால் தென் மண்டல திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.