எடப்பாடி பழனிச்சாமி நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக எம்.பி., எம்எல்ஏ.. இருகட்சி தொண்டர்களும் உரசல்
Recommended Video
சேலம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில், திமுக எம்.பி. மற்றும் எம்எல்ஏ பங்கேற்றதும், கூட்டத்தின்போது திமுகவினர் கோஷமிட்டதும் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் அஸ்தம்பட்டியில், ராமகிருஷ்ணா சிக்னல் முதல் ஏ.வி.ஆர் ரவுண்டானா வரையிலான 6.8 கிலோ மீட்டர் நீள இரண்டு அடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். .
இந்த விழாவில், சேலம் தொகுதியின் (திமுக) எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டசபை தொகுதி, திமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாழ்த்து கோஷம்
இதனால், விழாவில், அதிமுக மற்றும் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒருசேர பங்கேற்றனர். ஜெயலலிதா குறித்து, எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டு பேசியபோதெல்லாம், அதிமுகவினர் வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். அப்போது திமுகவினர் முகத்தில் கடுகடுப்பு தெரிந்தது.

திமுக கோஷம்
இதேபோல, பார்த்திபன் மற்றும் ராஜேந்திரனை வாழ்த்தி, திமுகவினர் கோஷமிட்டனர். அப்போது அதிமுக பக்கமிருந்து முனுமுனுப்பு குரல்கள் எழுந்தன. இப்படியாக இரு பரம வைரிகட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் ஒரே விழாவில் பங்கேற்று உரசியபடி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது

கூடுதல் பாதுகாப்பு
அதிமுக, திமுக ஆகிய இரு எதிரும், புதிருமான கட்சியினரும், பொது நிகழ்ச்சிக்காக, ஒரே இடத்தில் கூடியதால், வழக்கத்தைவிடவும், கூடுதலாக போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது. சட்டம்-ஒழுங்கு காவல்துறையினர் மட்டுமின்றி, ஆயுதப்படை போலீசாரும், பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

குற்றச்சாட்டு
இதனிடையே, திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் கூறுகையில், நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டு அவசரகதியில் பாலம் திறக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டும் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்று குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications