குலுங்கும் சேலம்.. தொடங்கியது திமுக இளைஞரணி மாநாடு.. குவியும் உடன்பிறப்புகள்
சேலம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் இன்று திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு இன்று தொடங்கி உள்ளது. பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு அரங்கில் சுமார் 5 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை திமுக தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக இளைஞரணி மாநில மாநாட்டை நடத்த திமுக தலைமை முடிவு செய்தது.

இந்த மாநாட்டை சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இது திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடாகும். ஆனால் மிக்ஜாம் புயல் பாதிப்பால் டிசம்பர் 17 ம் தேதி நடைபெற இருந்த இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து டிசம்பர் 24ம் தேதி மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதுவும் ஒத்திவைக்கப்பட்டது. 2முறை ஒத்திவைக்கப்பட்ட சேலம் திமுக இளைஞரணியின் மாநில மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதற்கு அமைச்சரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். இந்த மாநாட்டில் திமுக தலைவர் முக ஸ்டாலின், அமைச்சரும், உதயநிதி ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் பேச உள்ளனர்.

இந்த மாநாட்டுக்கான நிகழ்ச்சி என்பது நேற்று தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின் மாநாட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதாவது திமுக இளைஞரணி மாநாட்டின் சுடரை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். இதேபோல் நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள 1,500 பேர் கொண்ட இருசக்கர வாகனப் பேரணியையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநாட்டில் உதயநிதியின் மகன் இன்பநிதியும் பங்கேற்றார்.
இதன் பிறகு மாநாட்டு திடலில், 1,500 ட்ரோன்களைக் கொண்டு ட்ரோன் ஷோ நடத்தப்பட்டது. சட்ட மேதை அம்பேத்கர், திராவிட இயக்க தலைவர் பெரியார், முன்னாள் முதல்வர்களான அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவங்கள் வானில் ஜொலித்தன. இவர்கள் தவிர திமுகவின் சின்னமான உதயநிதி சூரியன், தமிழ்நாடு வரைபடம் உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டது. இது அனைவரையும் கவரும் வகையில் வித்தியாசமாக இருந்தது.
மேலும் தாரை தப்பட்டை, கரகாட்டம், ஒயிலாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இதையடுத்து இன்று திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. திமுக எம்பியும், கட்சியின் பொதுச்செயலாளருமான கனிமொழி, மாநாட்டுத் திடலில் உள்ள கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து, மாநாட்டுப் பந்தலை மாணவரணிச் செயலாளர் எழிலரசன் திறந்து வைத்தார். உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு மேடைக்கு வந்தார். இதன்மூலம் மாநாடு தொடங்கியது.
காலை 10 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் மாநாட்டுக்கு வருகை தர உள்ளார் அதன்பிறகு தீர்மானங்கள் வாசிப்பு, மொழிப் போர் தியாகிகளின் படத்திறப்பு, திமுக முன்னணி தலைவர்கள் உரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலையில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டுக்காக பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு பந்தலில் 1.25 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டு நிகழ்ச்சிகளை அனைவரும் காணும் வகையில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் அறுசுவை உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரும் எதிர்பார்ப்பையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ள இந்த திமுகவின் மாநில இளைஞரணி மாநாடு திமுகவிற்க்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டையொட்டி சேலம்- ஆத்தூர் பிரதான சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications