தென் மாவட்ட மக்களை எதிரியாக பார்க்கிறார் இபிஎஸ்.. பசும்பொன் வராமலிருக்க காரணம் அதுதான்.. புகழேந்தி!
சேலம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த எடப்பாடி பழனிசாமி நேரில் வராமல் இருப்பது ஏன் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை காரணமாக ஓபிஎஸ் - இபிஎஸ் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்தாலும், தென் மாவட்ட தொண்டர்கள் மத்தியில் ஓபிஎஸ் பலத்தோடு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இதனை நிரூபிக்கும் வகையில் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஓ பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தவுள்ளார். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் நாளை ஓபிஎஸ் தனது செல்வாக்கு என்ன என்பதை அனைவருக்கும் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் எடப்பாடி பழனிசாமி
ஆனால் எடப்பாடி பழனிசாமி குருபூஜை விழாவில் கலந்துகொள்ளவில்லை. இதனால் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் பசும்பொன் சென்று மரியாதை செலுத்த உள்ளனர்.

புகழேந்தி கேள்வி
இந்த நிலையில் சேலத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தென் மாவட்ட மக்களை பார்த்தால் எடப்பாடி பழனிசாமி எதிரியாக பார்க்கிறார். அதன் எதிரொலி தான் நாளை பசும்பொன்னில் நடைபெறும் விழாவில் பங்கேற்காமல் இருப்பதற்கு காரணம். தென் மாவட்ட மக்களின் வாக்குகள் வேண்டும், ஆனால் செல்ல மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

அதிமுக கோட்டை
தென் தமிழகம் அதிமுகவின் கோட்டையாக இருக்கிறது. ஆனால் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு அறிவித்தது அதிமுக தேர்தலில் தோல்வியடைய முக்கிய காரணமாக அமைந்தது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை. ஆனால் தென் மாவட்ட மக்கள் இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் ஆட்சியமைக்க முடியாது.

ஏன் பசும்பொன் வரவில்லை?
அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசனால், ஏன் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் வரவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை. பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயண மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமியால், ஏன் பசும்பொன் வந்து மரியாதை செலுத்த முடியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications