எடப்பாடி பழனிசாமிக்கு புது சிக்கல்.. 30 நாளில் குற்றப்பத்திரிக்கை.. சேலம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சேலம்: 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாக எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை விரிவாக விசாரித்து 30 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு சேலம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டசபை தேர்தலில் வேட்புமனு தாக்கலின்போது ஒவ்வொரு வேட்பாளரும் தங்களது சொத்து மற்றும் கடன் மதிப்பு உள்ளிட்டவற்றை குறிப்பிடுவது அவசியம்.அந்த வகையில் எடப்பாடி தொகுதியில் 2021ம் ஆண்டு போட்டியிட்ட அன்றைய முதல்வரும் இன்றைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனது சொத்து மதிப்பு ஒரு கோடி ரூபாய் வரை குறைந்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.
2016 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனக்கு மூன்று கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக கூறியிருந்தார்
ஆனால் 2021 சட்டசபை தேர்தலில் போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் எடப்பாடி பழனிச்சாமியின் சொத்து மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அவரது சொத்து மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமிக்கு 2016 இல் அசையும் சொத்து மதிப்பு 3.14 கோடியாகவும், அசையா சொத்து மதிப்பு 4.66 கோடியாக இருந்த நிலையில், 2021 இல் குடும்பத்தின் அசையும் சொத்து மதிப்பு 2.01 கோடியாகவும், அசையா சொத்துக்கள் 4.68 கோடியாகவும் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல் 2016-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்த கடன் 33 லட்சம் ஆக இருந்தது. இந்நிலையில் 2021 இல் அவரது கடன் அளவு 29 லட்சத்து 75,000 என்ற அளவில் குறைந்து இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
2016ம் ஆண்டு தாக்கல் செய்த வேட்பு மனுவில், எடப்பாடி பழனிசாமியின் தாய், மகன், மருமகள் பெயரில் இருந்த சொத்துக்கள் இடம் பெற்றிருந்தன. 2021ம் ஆண்டு வேட்பு மனுவில் மருமகள், மகன் பெயரில் உள்ள சொத்து மதிப்புகள் இடம் பெறவில்லை. 2021 இல் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள சொத்துக்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த சேலம் சிறப்பு நீதிமன்றம், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாக எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை விரிவாக விசாரித்து 30 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications