அதிமுகவை அழிக்க எத்தனையோ முயற்சிகளை செய்து வருகிறார் ஸ்டாலின்.. எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு!
சேலம்: சேலம் மாவட்டத்தில் இன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
கடந்த சில வாரங்களாக சேலத்தில் தங்கி இருந்தாலும் கால் மூட்டு வலி பிரச்சனை காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் மீண்டும் வேகம் காட்டத் தொடங்கியுள்ளார்.
சேலத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிககளைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "கருணாநிதி குடும்பம் என்ன அரச குடும்பமா? கருணாநிதிக்குப் பின்னர் ஸ்டாலின், ஸ்டாலினுக்குப் பின்னர் உதயநிதி ஸ்டாலின் உதயநிதிக்குப் பின்னர் இன்பநிதி என ஆட்சி செய்வதற்கு" என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துவிட்டது. திமுகவில் வாரிசு அரசியல் நடக்கிறது. மேட்டூர் உபரி நீர் திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது; விவசாயிகளுக்கான திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் உண்மையிலேயே அனைவரும் பாராட்டி இருப்பார்கள். தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதிமுகவில் சில எட்டப்பர்கள் இருந்ததால் 2021 தேர்தலில் ஆட்சியை இழந்தோம். யார் என்று உங்களுக்கே தெரியும். அதிமுக தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று எண்ணி கட்சிக்குள்ளேயே இருந்து துரோகம் செய்தவர்கள். கட்சியை காட்டிக் கொடுத்த சில எட்டப்பர்களை களை எடுத்துவிட்டோம். களையாக இருந்தவர்கள் அகற்றப்பட்டு விட்டார்கள்.
அதிமுக செழித்து வளர்ந்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். 2021 தேர்தலில் தமிழ்நாட்டில் இரட்டை இலக்கத்தில் அதிமுக வென்ற மாவட்டம் சேலம் மாவட்டம். அதிமுகவை அழிப்பதற்கு, முடக்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் எத்தனையோ முயற்சிகளை செய்துவிட்டார். அத்தனை முயற்சிகளையும் முறியடித்து விட்டோம். இனி அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது.
இன்றைய கூட்டத்தை வேறு ஒரு இடத்தில் நடத்த திட்டமிட்டிருந்தோம். அதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் அந்த இடத்தில் தடை போட்டது திமுக அரசு. சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணத்தை நிறுத்தி விட முடியுமா? முதல்வர் ஸ்டாலின் 3 முறை சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார். 3 முறை வந்து சேலம் மாவட்டத்திற்கு என்ன செய்தார்?
கோட் சூட் போட்டுக்கொண்டு வருகிறார். போட்டோ எடுக்கிறார். விமானத்தில் ஏறி போய் விடுகிறார். சேலத்தில் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார். நாம் அமைத்த இரட்டை அடுக்கு பேருந்து நிலையத்திற்கு அவரது அப்பா பெயரை வைக்கிறார். யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது?" என கடுமையாகச் சாடினார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications