கிராமம் முதல் நகரம் வரை.. தமிழ்நாட்டில் கஞ்சா ஆம்லெட் விற்பனை.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
நாமக்கல்: தமிழ்நாட்டில் கஞ்சா ஆம்லெட் வந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை நடக்காத இடங்களே இல்லை என்று விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலிம் தாமதமாக விழித்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பாஜக உடன் மட்டுமே அதிமுக கூட்டணியை உறுதியை செய்துள்ள நிலையில், அடுத்தக் கட்டமாக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுக ஆட்சியில் 67 சதவிகிதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மதுரையில் மேயரின் கணவரே ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம், நெல்லை மாவட்டங்களிலும் மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கு இடையில் மோதல் இருந்து வருகிறது.
அதேபோல் தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. கஞ்சா சாக்லேட் வந்துவிட்டது. ஆம்லெட்டில் கூட கஞ்சா வந்துவிட்டதாக கூறுகிறார்கள். போதைப்பொருள் விற்பனையால் தமிழ்நாடு சீரழிந்து கிடக்கிறது. இது தொடர்பாக சட்டசபையில் பலமுறை பேசி இருக்கிறேன். அப்போது கண்டுகொள்ளாத முதல்வர் ஸ்டாலின், தற்போது தாமதமாக விழித்துக் கொண்டு இருக்கிறார்.
மூன்றரை ஆண்டுகள் கழித்து இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று ஞானம் பிறந்தது போன்று உரையாற்றுகிறார். இப்படி தாமதமாக விழித்துக் கொள்ளும் முதலமைச்சர் நமக்கு தேவையா? தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனை நடந்து வருகிறது.. அது உண்மை தானே.. கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை நடக்காத இடங்களே இல்லை..
மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கஞ்சாவை உபயோகித்து சீரழியும் நிலை காணப்படுகிறது என்று விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் காரணமாக அதிமுகவினர் உற்சாகம் அடைந்தாலும், கட்சிக்குள் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் உள்ள அதிருப்தியை களைய நடவடிக்கை எடுக்காதது பேசுபொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications