யானையிடம் சிக்கி பிணமான ஐயப்ப பக்தர்.. பலியாவதற்கு முன் 2 குழந்தைகளை புதரில் வீசி காப்பாற்றினார்!
சபரிமலையில் சேலத்தை சேர்ந்த ஐயப்ப பக்தரை யானை மிதித்து கொன்றது.
சேலம்: நள்ளிரவு... நடுக்காடு.. உயிர் போகும் நேரத்திலும் குழந்தைகளை தூக்கி புதரில் வீசி யானையிடமிருந்து காப்பாற்றிய ஐயப்ப பக்தரின் செயல் அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சபரிமலைக்கு இது மாலை போடும் சீசன் என்பதால் பலரும் விரதமிருந்து ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். அதுபோல கடந்த 7ம் தேதி சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்த 40 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர், சபரிமலைக்கு 2 வேனில் கிளம்பினார்கள்.
இதில் 30பேர், பம்பை சென்று அங்கிருந்து சபரிமலை சென்றனர். மீதியுள்ள 10 பேர் எரிமேலி காட்டுப்பகுதி வழியாக, சபரிமலைக்கு நடந்து செல்ல முடிவெடுத்தனர்.

காட்டுப்பகுதி
இந்த 10 பேரில் பரமசிவம் என்பவரும் ஒருவர். 36 வயதான பரமசிவம் ஒரு கூலி தொழிலாளி. தனது குழந்தை, மற்றும் சகோதரி குழந்தையை அழைத்து கொண்டு மற்ற 9 பேருடன் சேர்ந்து காட்டுப் பகுதியில் நடந்து சென்றார்.

நள்ளிரவு நேரம்
அது ஒரு நடுக்காடு... நள்ளிரவு நேரம். அப்போது திடீரென 3 யானைகள் பக்தர்களுக்கு எதிரே நின்றதை கண்டு நடுங்கிவிட்டார்கள். அந்த ராத்திரி நேரத்தில் 10 பேர் கும்பலாக இருப்பதை கண்டதும் யானைகளும் மிரண்டு போய் பக்தர்களை துரத்த ஆரம்பித்துவிட்டன. காட்டுக்குள் இடம் தெரியாமல் கும்மிருட்டில் ஆளாளுக்கு தலைதெறிக்க ஓடினார்கள். அப்போது பரமசிவம் இரு குழந்தைகளையும் தோளில் சுமந்து கொண்டு ஓடினார்.

புதருக்குள் வீசினார்
இதில் ஒரு யானை பரமசிவத்தை துரத்த ஆரம்பித்தது. இரு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு வேகமாக பரமசிவத்தால் ஓட முடியாமல், நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். அந்த நேரத்தில் யானை கிட்ட வந்து விட்டது. என்ன செய்வதென்றே தெரியாமல் நடுங்கி போன பரமசிவம், இருகுழந்தைகளையும் தூக்கி பக்கத்திலிருந்த புதருக்குள் வீசினார்.

குழந்தைகள் மீட்பு
குழந்தைகளை வீசி எறிந்த அடுத்த கணமே யானை பரமசிவத்தை மிதிக்க ஆரம்பித்துவிட்டது. கொஞ்ச நேரத்திலேயே பரமசிவம் ரத்த வெள்ளத்தில் பிணமானார். சிறிது நேரம் கழித்து உடனிருந்த பக்தர்கள் பரமசிவத்தை தேடி வந்து பார்த்தபோதுதான் அவர் சடலமாக கிடந்ததும், புதருக்குள் 2 குழந்தைகள் அழுது கொண்டிருந்ததும் தெரியவந்தது.

பள்ளப்பட்டி பரமசிவம்
தகவலறிந்து சபரிமலை வனத்துறையினர் குழந்தைகளை பத்திரமாக மீட்டதுடன், பரமசிவத்தின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சாகும் தருவாயிலும் குழந்தைகளை காப்பாற்றி விட்டு சென்ற பள்ளப்பட்டி பரமசிவத்தின் மரணம் சேலம் மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications