மேட்டூர் அனல் மின்நிலையத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து- மின் உற்பத்தி பாதிப்பு!
மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
Recommended Video
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் அனல் மின் நிலையம், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட மற்றொரு பிரிவும் செயல்பட்டு வருகிறது.
இவற்றின் மூலம் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இன்று அதிகாலை மேட்டூர் அனல் மின் நிலைய முதல் அலகான 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் உள்ள கன்வேயர் பெல்ட் பகுதியில் உராய்வு காரணமாக தீப்பற்றியது.
இதன் காரணமாக தீ மளமளவென பரவியது, இதுகுறித்து தகவலறிந்த மேட்டூர் அனல்மின் நிலைய தீயணைப்பு படையினரும், ஊழியர்களும் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து காரணமாக. கொதிகலன்களுக்கு செல்லும் நிலக்கரி தடைபட்டதால் உடனடியாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக முதல் பிரிவில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த தீ விபத்து காரணமாக பல லட்ச ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆய்வுக்குப் பிறகு சேதத்தின் முழு விபரம் தெரியவரும்.
கடந்த 2012ஆம் ஆண்டு இதே போல் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.