பெட்ரோல் ஊற்றி கொளுத்துவேன்... சேலம் போலீசாருக்கு மிரட்டல்.. இந்து முன்னணி நிர்வாகி அவிநாசியில் கைது
சேலம்: முககவசம் அணியாமல் சென்ற நபருக்கு போலீசார் ஃபைன் போட்டதால் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவான இந்து முன்னணி நிர்வாகி செல்லபாண்டியன் அவிநாசியில் பதுங்கியிருந்தபோது சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.
Recommended Video
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் முக கவசம் அணியாமல் இருந்தார்.
அவரை தடுத்து நிறுத்திய போலீசார், முக கவசம் அணியவில்லை என்பதால் ரூ200 ஃபைன் போட்டனர். அதற்கான ரசீதையும் காரணத்துடன் போலீசார் எழுதிக் கொடுத்துவிட்டனர். அந்த நபர் வந்த வாகனத்தின் சாவியையும் போலீசார் எடுத்துக் கொண்டனர்.

ஆட்களுடன் இந்து முன்னணி பிரமுகர்
இது தொடர்பாக அந்த நபர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் நடக்கும்போதே கொண்டலாம்பட்டி ஒன்றிய இந்து முன்னணி தலைவரான செல்லபாண்டியன் சில நபர்களுடன் அந்த இடத்துக்கு வந்தார்.

சேலம் போலீசாருடன் மோதல்
போலீசார் ஃபைன் விதித்த நபர் தமது உறவினர்; ஆகையால் அவருக்கு விதிக்கப்பட்ட ரூ200 ஃபைனை உடனே திருப்பித் தரவேண்டும்; அத்துடன் பறிமுதல் செய்த வாகனத்தின் சாவியையும் தர வேண்டும் என்று சவுண்டுவிட்டுப் பார்த்தார் செல்லபாண்டியன்.

செல்லபாண்டியன் கொலை மிரட்டல்
ஆனால் போலீசாரோ சட்டப்படிதானே நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று சொல்லிப் பார்த்தனர். இதனை கேட்காத செல்லபாண்டியன், இந்த செக்போஸ்ட்டையே கொளுத்துவேன்; எல்லோரையும் கொன்னுடுவேன்; நான் இந்த ஒன்றியத்தின் தலைவர்; எங்க ஆளுகளை இறக்கி போராட்டம் செய்வோம் என்றெல்லாம் உதார்விட்டார்.

சங்கை அறுத்துடுவேன்
அத்துடன் போலீசாருக்கு டூட்டி போட்டா உட்கார்ந்துட்டு போக வேண்டியதுதானே.. இதென்ன வண்டியை எல்லாம் மறிக்கிறது; நான் தலைவருக்கு போன் போடவா? போலீஸ்காரனுகளோட சங்கை அறுத்துடுவேன் என்றெல்லாம் சினிமா பாணியில் ஏகத்துக்குமாக வசனம் பேசினார். செல்லபாண்டியனின் இந்த உதார் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகவும் பரவியது.

அவிநாசியில் கைது
இதையடுத்து செல்லபாண்டியன் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் சேலத்தில் இருந்து தப்பி ஓடி தலைமறைவானார் செல்லபாண்டியன். அவரது செல்போன் அழைப்புகளை வைத்து அவிநாசி அருகே பதுங்கி இருந்த செல்லபாண்டியனை கொத்தாக போலீசார் கைது செய்து சேலம் கொண்டு வந்தனர்.












Click it and Unblock the Notifications