ராமர் கோவில் கேள்வி கேட்டால் "ICE" வைப்பாங்க..Income Tax, CBI, ED வரும்.. மாநாட்டை அதிரவைத்த கனிமொழி
சேலம்: அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது; அப்படி கேள்வி கேட்டால் "ICE" வைப்பாங்க.. அதாவது .Income Tax, CBI, ED வரும் என சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி அதிரடியாக பேச மாநாடு கரவொலியால் அதிர்ந்தது.
சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் இன்று காலை கனிமொழி எம்.பி கொடியேற்றி வைத்தார். மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசியதாவது: நாளை வட இந்தியாவில் ஒரு கோவிலை திறக்கிறார்கள். அந்த கோவிலை திறப்பதை பற்றி நாங்க எதுவும் சொல்லப் போவது இல்லை. ஏன் ஜனாதிபதியை அழைக்கப் போவது இல்லை? என கேட்கப் போவதும் இல்லை. பிரதமர் மோடி வழிபாடு நடத்துகிறார். அதைப் பற்றி கேட்கப் போவது இல்லை.

துர்கா ஸ்டாலின்: எனக்கு கோவிலை பற்றி தெரியாது. நம்முடைய அறநிலையத்துறை அமைச்சர் இங்கே அமர்ந்திருக்கிறார். ஒரு கோவிலை முழுமையாக முடிக்காமல் திறக்கலாமா? உங்களைத்தான் கேட்கிறேன்.. திறக்க கூடாது இல்லை.. ஒரு கோவிலை முழுசா கட்டி முடிக்காம திறக்க கூடாது. ஆனால் இன்னைக்கு இருக்கிற பிஜேபி என்ன சொல்லுது.. நாங்கதான் இந்து மதத்தைக் காப்பாற்றுகிறோம். நாங்கதான் சனாதன தர்மத்தைக் காப்பாற்றுகிறோம் என்கிறது. நாங்கதான் கோவிலை காப்பாற்றுகிறோம். கோவிலை எல்லாம் எங்ககிட்ட கூட கொடுத்துடுங்க என்கிறார்கள். எங்க அண்ணி கூட உட்கார்ந்திருக்காங்க.. (முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டால்ன்) மனசு கூட கஷ்டமாத்தான் இருக்கும். கட்டி முடிக்காத கோவிலை திறக்கக் கூடாது என்கிறது இந்து மதம்.
கேள்வி கேட்டால் ICE வைப்பாங்க.. ஆனால் அதை அரசியலாக்கி உங்களுடைய அரசியல் லாபத்துக்காக இந்துக்களை மதிக்காமல் அந்த உணர்வுகளை மதிக்காமல், உங்க ஆளுங்களே கோவிலுக்கு வரமாட்டேன் என சொல்லுகிற அளவுக்கு அரசியல் விளையாட்டில் அந்த கோவிலை நாளை திறக்கப் போகிறீர்கள். அதுக்கு அரைநாள் லீவு. தனியார் டிரஸ்ட் நடத்துகிற கோவில் விழாவுக்கு அரசு இலவசமாக சிறப்பு ரயில்கள் விடுறாங்க.. இதை எல்லாம் நாம கேள்வி கேட்கக் கூடாது. கேள்வி கேட்டால், நமக்கு "ICE" வைப்பாங்க.. "ICE"ன்னு என்னான்னா INCOME TAX, CBI, ED இது 3-ம் வரும். யார் கேள்வி கேட்டாலும் இது 3-ம் வரும். ஆனால் இதற்கு எல்லாம் பயப்படக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. நீங்க என்ன செய்தாலும் உங்களை எதிர்ப்போம்!உங்களது கருத்தை எதிர்த்து நிற்போம். மத்தியில் இருக்கும் ஒன்றிய ஆட்சியை அகற்றுவோம். இவ்வாறு கனிமொழி எம்பி பேசினார்.












Click it and Unblock the Notifications