மழைவெள்ள ஆய்வு நேரத்தில் பூசாரி சம்பளத்துக்கு பஞ்சாயத்தா? நிர்மலா சீதாராமனுக்கு டோஸ்விட்ட கனிமொழி!
சேலம்: தூத்துக்குடி மழை வெள்ள ஆய்வுக்கு வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பூசாரியின் ஊதிய பிரச்சனைக்கு பஞ்சாயத்து நடத்தியதை கடுமையாக விமர்சித்துள்ளார் திமுக எம்பி கனிமொழி.
சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் கனிமொழி எம்பி பேசியதாவது: தமிழ்நாட்டை எந்தெந்த முறையில் வஞ்சிக்க முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசு. தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய மக்களுக்கு உதவிகள் செய்யலை. நீங்க பாரத பிரதமர். ஆனால் தமிழ்நாட்டுக்கு நீங்க கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை தருவது இல்லை.

5 பைசா இன்னும் வரலை: வெள்ளம் வந்தது. பிரதமர் சொன்னார்.. நான் வந்து மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அனுப்பி இருக்கிறேன். அதேபோல நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்பி இருக்கிறேன் என்றார் பிரதமர் மோடி. ராஜ்நாத் சிங்கும் நிர்மலா சீதாராமனும் வந்தார்கள்.. பார்வையிட்டார்கள்.. ஆனால் 5 பைசா கூட இன்னும் வரலை..

தமிழ்நாட்டுக்கு ஏன் நிதி இல்லை?: ஆனால் இதே குஜராத்தில் வெள்ளம் வந்த போது ஆயிரக்கணக்கான கோடிகளை கொண்டு போய் கொட்டினீர்கள். தமிழ்நாட்டில் இருப்பவர்கள் மனிதர்கள் இல்லையா? என்னுடைய தூத்துக்குடி தொகுதியில் எத்தனை ஆயிரம் வீடுகள்.. அடித்து செல்லப்பட்டன.. எத்தனை விவசாயிகள் பாதிக்கப்பட்டாங்க.. சென்னை எந்த அளவுக்கு மோசமாக பாதிக்கப்பட்டது? இதை எல்லாம் உங்கள் மனதை உருக்கவில்லையா? ஏன்னா இது தமிழ்நாடு. தமிழ்நாட்டில் இருக்கக் கூடியவர்வர்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அதனால் நீங்கள் எங்களுக்கு எந்த உதவியும் எந்த நிவாரணமும் நியாயமாக வழங்கப்பட வேண்டிய நிதியையும் தரமாட்டீர்கள்.
பூசாரி சம்பள பஞ்சாயத்து: அப்படி வந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்க்க வந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன பண்ணாங்க? கோவிலுக்குப் போய் அங்க இருக்கிற பூசாரிக்கு ஏன் சம்பளம் கம்மியா கொடுக்கிறீங்கன்னு கேள்வி கேட்கிறாங்க.. எதை ஆய்வு செய்ய சொன்னா? எதை ஆய்வு செய்றாங்க? இதுதான் அவர்களது எண்ணம். அவர்களுக்கு யாரைப் பற்றிதான் அக்கறை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கனிமொழி எம்பி பேசினார்.












Click it and Unblock the Notifications