எதிர்பார்க்காத கனிமொழி! சர்ப்ரைஸ் கொடுத்த கட்சிக்காரர்கள்! சாலை வழிப் பயணத்தில் நடந்த சுவாரஸ்யம்!
சேலம்: திமுக இளைஞரணி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த சனிக்கிழமை இரவு தூத்துக்குடியிலிருந்து சாலை மார்க்கமாக சேலம் சென்ற கனிமொழிக்கு வழிநெடுகிலும் கட்சியினர் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தது அவரை நெகிழ வைத்துள்ளது.
கட்சிக்காரர்கள் தன்னை வரவேற்பதற்காக ஊரெங்கும் இப்படியொரு ஏற்பாட்டை செய்திருப்பார்கள் என்பதை சிறிதும் எதிர்பார்த்திராத கனிமொழி, கட்சியினர் கொடுத்த சர்ப்ரைஸால் வியந்துவிட்டார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி மாநாடு நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடியிலிருந்து சனிக்கிழமை மாலை புறப்பட்டு சாலை மார்க்கமாக சேலம் சென்றார் கனிமொழி.

பைபாஸ் வழியாகவே கனிமொழியின் கார் சீறிப்பாய்ந்த நிலையில் சேலத்தை நெருங்க நெருங்க ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என ஆதரவாளர்கள் அன்பு பிடிவாதம் பிடித்ததால், ஒரு சில ஊர்களுக்குள் மட்டும் சென்றார் கனிமொழி. குறிப்பாக மகுடஞ்சாவடியில் எதிர்பார்க்காத அளவு கூட்டம் திரண்டிருந்ததோடு கனிமொழியை வாழ்த்து முழக்கங்கள் எழுப்பினர். பொதுவாக இது போன்ற வரவேற்பு நிகழ்ச்சிகள் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சாலை மார்க்கமாக செல்லும் போது நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கனிமொழிக்கு சேலம் மாவட்டத்தில் கிடைத்துள்ள இந்த வரவேற்பு திமுக உட்கட்சி வட்டார அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. கருணாநிதியை பொறுத்தவரை பெரும்பாலும் சாலை வழி பயணமாக காரில் பயணிக்கக் கூடியவர். அப்படி பயணித்தால் தான் போகிற வழிகளில் எல்லாம் கட்சிக்காரர்களை சந்திக்க முடியும், அவர்களும் உற்சாகம் அடைவார்கள் என்பதால் விமான பயணத்தை தவிர்த்தவர்.
தவிர்க்க முடியாத காரணங்கள் இருப்பின் மட்டும் சாலை வழிப் பயணத்தை ரத்து செய்து ரயிலில் பயணிப்பார் கருணாநிதி. தனது தந்தை பாணியை கடைபிடிக்கும் கனிமொழி, கொரோனா காலக்கட்டத்தில் சென்னைக்கும், தூத்துக்குடிக்கும் இடையே காரிலேயே வாரத்திற்கு 2 முறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications