மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை.. பள்ளி நிர்வாகம் அலட்சியம்.. கராத்தே மாஸ்டரை துவைத்து எடுத்த மக்கள்!
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமந்துறை பகுடுபட்டு கிராமத்தில் ஞானதீபம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி என்ற தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆத்தூர் அருகே உள்ள சீலயம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா (46) என்பவர் கராத்தே மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
பள்ளி மாணவிகளிடம் நல்லொழுக்க பழக்கங்களை எடுத்து சொல்ல வேண்டிய கராத்தே மாஸ்டர் ராஜா மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த காமக்கொடூர ஆசிரியரின் தொல்லைகளை வெளியே சொல்ல முடியாமல் மாணவிகள் பொறுத்து வந்தனர்.

பாலியல் தொந்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கரியலூர் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி தலைமையாசிரியரின் மகள் இந்த தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அந்த மாணவிக்கும் கராத்தே மாஸ்டர் ராஜா மூன்று ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி மிகுந்த மன விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

தற்கொலைக்கு முயன்ற மாணவி
இதற்கிடையே கடந்த 22-ம் தேதி இரவு அந்த மாணவி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அவரது தாய்-தந்தை ஓடிச்சென்று அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த மாணவி கையில் பிளேடால் கிழித்த நிலையில் இருந்துள்ளார். மேலும் சேலையால் தூக்குப்போட்டும் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

எஸ்.பி அலுவலகத்தில் புகார்
சுய நினைவு இல்லாமல் கிடந்த மகளை மீட்டு உடனடியாக அருகில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் மாணவியை சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த மாணவி சிகிச்சை பெற்று குனமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் திரண்டு சேலம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

காமக்கொடூரன்
அதன்பேரில் வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி முத்துசாமி தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் மாணவியின் பெற்றோர்கள் வாழப்பாடி டி.எஸ்பி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி புகார் குறித்து தெரிவித்தனர். கராத்தே மாஸ்டர் ராஜா மாணவிக்கு மூன்று ஆண்டுகளாகவே பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.இந்த மாணவி 8-ம் வகுப்பு படிக்கும்போது இதுபோன்ற சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம்
இந்த மாணவி பள்ளி ஆசிரியரிடம் தகவல் தெரிவித்து அவர் மூலம் பள்ளி உரிமையாளரிடம் தகவல் சென்றுள்ளது. ஆனாலும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் மீண்டும் அதே பள்ளியில் அந்த கராத்தே மாஸ்டர் பணியாற்றி வந்துள்ளார். அந்த மாணவி இதனை மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டு மன இன்னலுக்கு ஆளாகி உள்ளார்,

உரிமையாளரிடம் விசாரணை
பள்ளியின் மேலாளரும், உரிமையாளருமான ஸ்டீபன் தேவராஜ் என்பவர் முதலிலேயே நடவடிக்கை எடுத்து இருந்தால் சம்பவம் இந்த அளவுக்கு சென்று இருக்காது. புகாரின் பேரில் பள்ளி உரிமையாளரும், மேலாளருமான ஸ்டீபன் தேவராஜை போலீசார் பிடித்து வாழப்பாடி மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

பொதுமக்கள் சரமாரி அடி-உதை
மேலும் பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டர் ராஜாவை கருமந்துறையில் கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவரை கருமந்துறை போலீஸ் நிலையம் கொண்டு வந்து ஒப்படைத்தனர். அப்போது மாணவியின் தந்தை ஆவேசத்தில் கராத்தே மாஸ்டரை தாக்க முயன்றார். அங்கு இருந்த பொதுமக்களும் அவரை சரமாரியாக தாக்கினர். பின்பு போலீசார் பொதுமக்களிடம் இருந்து கராத்தே மாஸ்டரை மீட்டனர். அவரிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications