சர்ரு புர்ருனு லாரியும் காரும் போகுது! நடுரோட்டில் சிறுவர்களுக்கு ஸ்கேட்டிங்! கோச் மீது வழக்கு
சேலம்: சென்னை- சேலம் நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் ஸ்கேட்டிங் பயிற்சி கொடுத்த பயிற்சியாளர் பிரபாகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பனமரத்துப்பட்டி பிரிவு சாலையில் இருந்து ஆண்டலூர் கேட் வரை எப்போதும் டிராபிக் அதிகமாகவே இருக்கும். இந்த சாலையில் கனரக வாகனங்கள், பைக்குகள், இலகு ரக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.

இப்படிப்பட்ட ஆபத்தான சாலையில் சிறுவர்கள் ஸ்கேட்டிங் சென்ற வீடியோ வைரலானது. பொதுவாக ஸ்கேட்டிங்கிற்காக தனி மைதானம், பூங்கா, தனிப்பட்ட இடவசதி என இருக்கும். ஆனால் நேற்றைய தினம் சிறுவர்களுக்கு சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சி அளிக்கப்பட்டது.
நடுரோட்டில் சிறுவர்கள் தத்தி தடுமாறி ஸ்கேட்டிங் செய்தனர். அப்போது லாரிகள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் என சரமாரியாக சென்றுக் கொண்டிருந்ததன. அந்த லாரிகளுக்கு பக்கத்திலேயே இவர்களும் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
சிறுவர்கள்தானே சற்று தடுமாறியிருந்தால் பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கும். அவ்வழியாக சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் கூட இந்த மாணவர்களை பார்த்து சற்று அச்சமடைந்தனர். இதையடுத்து அந்த வீடியோ வைரலான நிலையில் ஆபத்தான முறையில் 12 சிறுவர்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி கொடுத்ததாக பயிற்சியாளர் பிரபாகரன் (29) மீது மல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications