மேட்டூர் அணை நீர்மட்டம் 51 அடியாக சரிவு.. ஏமாற்றிய பருவமழை.. கவலையில் காவிரி டெல்டா விவசாயிகள்
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. பருவமழை குறைந்து போன நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு விநாடிக்கு 8000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவடைந்து வருவதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேட்டூர் அணைக்கு நேற்று 1109 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்றே உயர்ந்து விநாடிக்கு 2000 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காகவும் பாசனத்திற்காகவும் விநாடிக்கு 8000 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 52.50 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 51.95 அடியாக குறைந்தது. இதேநிலை நீடித்தால் இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதியன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. வழக்கமாக பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய உடன் கேரளாவிலும் கர்நாடகாவிலும் அணைகள் நிரம்பி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். கேரளா, கர்நாடகாவில் நடப்பாண்டு பருவமழை குறைவாகவே பெய்துள்ளது. கர்நாடகா அணைகளில் தண்ணீர் இருந்தாலும் தற்போது குறைவான அளவே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நடப்பாண்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் குறைவான அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் நெற்பயிர்கள் பல இடங்களில் கருகத் தொடங்கியுள்ளன. ஆற்று நீரை நம்பியுள்ள காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குறுவை சாகுபடிக்கே தண்ணீர் இல்லாத நிலையில் சம்பா, தளாடி பயிர் சாகுபடியை எப்படி தொடங்குவது என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கேரள மாநிலத்திலும் பருவமழை குறைவாக உள்ளதால் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டமும் சரிவடைந்து வருகிறது. இதன் காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீரை நம்பி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications