எனக்கு அவரை தெரியும்.. இவரை தெரியும்.. வேலை வாங்கித் தருவதாக பணமோசடி! சேலத்தில் பாஜக நிர்வாகி கைது!
சேலம்: டெல்லியில் எனக்கு அவரை தெரியும், இவரை தெரியும் என உதார் விட்டு மத்திய அரசின் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி கமலக்கண்ணனை சேலம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கலர் கலராக ரீல்: சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் சேலம் மேற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி செயலாளராக உள்ளார். சர்க்கரையாக பேசக்கூடிய இவர், டெல்லியில் தனக்கு தெரியாதவர்களே இல்லை என்கிற அளவுக்கு ஊருக்குள் உதார் விட்டு வந்திருக்கிறார். இதனை நம்பிய சந்திரமோகன் என்பவர் கமலக்கண்ணனிடம் வேலை விஷயமாக தொடர்பு கொண்டிருக்கிறார். ஒன்றும் பிரச்சனையில்லை வருமான வரித்துறையில் விளையாட்டு பிரிவு இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாங்கிவிடலாம் என கலர் கலராக ரீல் விட்டிருக்கிறார் கமலக்கண்ணன்.

பாஜக நிர்வாகி கைது: இதனை படித்த பட்டதாரி இளைஞரான சந்திரமோகனும் நம்பி, கொஞ்சம் கொஞ்சமாக ரூ.35 லட்சம் வரை பாஜக நிர்வாகி கமலக்கண்ணனுக்கு வழங்கியிருக்கிறார். சந்திரமோகனை டெல்லிக்கு அழைத்துச் சென்ற கமலக்கண்ணன், அங்கு படிப்பு ஆவணங்களை சரிபார்ப்பது போலவும், மருத்துவ பரிசோதனை நடத்துவது போலவும் பாவ்லா செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல எள்ளளவும் சந்தேகம் ஏற்படாத வண்ணம் போலியாக வருமான வரித்துறை பணிக்கு தேர்வும் நடத்தியிருக்கிறார்.
போலி பணி ஆணை: அதைத் தொடர்ந்து டெல்லியிலிருந்து தபால் மூலம் போலி பணி ஆணையையும் சந்திரமோகனுக்கு பாஜக நிர்வாகி கமலக்கண்ணன் அனுப்பி வைத்ததாக சந்திரமோகனின் தந்தை போலீஸில் அளித்த புகாரில் கூறியிருக்கிறார். இந்தப் புகாரின் பேரில் சேலம் மேற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி செயலாளர் கமலக்கண்ணனை போலீஸார் கைது செய்துள்ளனர். அதோடு மட்டுமின்றி கமலக்கண்ணன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள ஆய்வு: இதனிடையே தமிழ்நாட்டில் பாஜக நிர்வாகிகள் கைது உள்ளிட்ட அவர்கள் மீதான நடவடிக்கைகள், சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி கள ஆய்வு நடத்த சதானந்தா கவுடா உட்பட 4 பேர் அடங்கிய குழு அமைத்துள்ளார் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா.












Click it and Unblock the Notifications