சேலம் பெரியார் பல்கலை.யில் துணைவேந்தருக்கு நிகரான பதவியில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்? புதிய சர்ச்சை!
சென்னை: சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பதவிக்கு நிகரான பதவியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவாளரை நியமித்திருப்பதற்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் புல முதன்மையர் பதவி, துணை வேந்தருக்கு நிகரான பதவியாகும். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பது, பாடத் திட்டங்களை வடிவமைப்பது, புதிய பாடங்களை துவக்க அனுமதி அளிப்பது போன்ற பணிகளை செய்வது புல முதன்மையர் ஆவார்.

மூத்த பேராசிரியர்கள் லிஸ்ட்: இந்த பதவிக்கு அனுபவமே இல்லாத பொருளியல் துறை பேராசிரியரைநியமித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆங்கிலத் துறை பேராசிரியர் சங்கீதா, இயற்பியல் துறை பேராசிரியர் அன்பரசன், இதழியல் துறைப் பேராசிரியர் நந்தகுமார், வேதியியல் துறைப் பேராசிரியர் கோபி மற்றும் ராஜ் நூலக அறிவியல் துறைப் பேராசிரியர் முருகன், புவியமைப்பியல் துறை பேராசிரியர் வெங்கடாஜலபதி, உணவு அறிவியல் துறைப் பேராசிரியர் பூங்கொடி, ஆடைவடிவமைப்பியல் துறைப் பேராசிரியர் லட்சுமி மனோகரி, ஊட்டச்சத்து வியல் பேராசிரியர் நாசினி போன்ற பல மூத்த அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் இருக்கும் பொழுது வயதிலும் அனுபவத்திலும் சிறிய பொருளியல் துறைப் பேராசிரியர் ஜெயராமனை நியமித்திருப்பது கண்டனத்திற்கும் சந்தேகத்திற்கும் உரியது ஆகும்.
ஆர்.எஸ்.எஸ், ராமகிருஷ்ணா மடம் தொடர்பு: இவர் தீவிர ஆர்எஸ்எஸ் ஆதரவாளரும், சென்னை ராமகிருஷ்ணா மடத்தோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவரும் ஆவார். இங்கு பணியில் சேருவதற்கு முன்பு ராமகிருஷ்ண மடத்தின் கல்லூரியான விவேகானந்தா கல்லூரியில் பணி ஆற்றியவர் என்ற ஒரே காரணத்திற்காக துணை வேந்தர் இவரைப் புல முதன்மையராக நியமித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணைக்கு ஆபத்து: தற்பொழுது தமிழக அரசு துணை வேந்தர் மற்றும் பதிவாளரின் ஊழலுக்கு எதிராக பல்வேறு கோப்புகளை பல்கலைக் கழக பதிவாளரிடம் கேட்டு உள்ளது. பல்கலைக் கழகம் முறையாக கோப்புகளை வழங்காமல் விசாரணையை நீர்த்து போகும் வழியில் விசாரணைக்கு சம்பந்தமில்லாத கோப்புகளையும் தேவையற்ற பதில்களையுமே அரசுக்கு அளித்துள்ளதாக தெரிய வருகிறது.
உடனே டிஸ்மிஸ் செய்க: அரசின் விசாரணைக்கு தடை ஏற்படுத்தும் நோக்கில் ஆர்எஸ்எஸ் மற்றும் மதவாதிகளோடு சேர்ந்து விசாரணையை முறியடிக்க துணை வேந்தர் ஆர்எஸ்எஸ் ஆதரவாளருக்கு இந்த பதவியினை அளித்துள்ளார்.எனவே உடனே இந்த புலமுதன்மையர் பதவியிலிருந்து ஜெயராமனை உடனடியாக நீக்கி விட்டு தகுதியுள்ள மூத்த பேராசிரியர்கள் யாரேனும் ஒருவருக்கு இந்தப் பதவியினை வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு அரசை, குறிப்பாக உயர் கல்வித்துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு திராவிடர் விடுதலைக் கழகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications