சேலம்-அரூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று முதல் புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?
சேலம் : அரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் எச்.புதுப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி இன்று முதல் செயல்படுகிறது. இந்த சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டணத்தை நிர்ணயம் செய்திருக்கிறது.இதன்படி கார், ஜீப், வேன், அல்லது இலகுரக வாகனங்கள், ஒரு முறை பயணம் செய்வதற்கு ரூ.70-ம், அதே வாகனம் அதேநாளில் திரும்பி பயணம் செய்ய ரூ.100-ம் கட்டணம் ஆகும்.
சேலத்தில் இருந்து சென்னை செல்ல இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று திருப்பத்தூர் மாவட்டம் வழியாக பயணித்து வாணியம்பாடியை அடைந்து வேலூர் பைபாஸில் போகலாம்.இன்னொரு வழியாக ஆத்தூர், கள்ளக்குறிச்சி வழியாக உளுந்தூர்பேட்டையை அடைந்து போகலாம். இரண்டாவது வழியாக கள்ளக்குறிச்சி வழியில் தான் சென்னை செல்லும் வாகனங்கள் சேலத்தில் இருந்து பெரும்பாலும் சென்று வருகின்றன. ஏனெனில் முதல் வழியான திருப்பத்தூர் பாதை, நான்கு வழிப்பாதையாக இல்லாமல் இருந்தது. இதனால் கிருஷ்ணகிரி சென்று, அதன்பிறகு வழக்கம் போல் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முதல் -சேலம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை முதல் தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி வரை ரூ.320 கோடி மதிப்பில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. இப்போது இந்த நெடுஞ்சாலை பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. அதேநேரம் அரூர் -அயோத்தியாப்பட்டணம் சாலையில் பணிகள் முழுமையாக இன்னும் முடியவில்லை என்று கூறப்படுகிறது.அந்த பணிகள் முடிந்த பின்னரே சுங்கச்சாவடியை திறக்க வேண்டும் என்று பாமக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்தன.
இந்நிலையில் இந்த நெடுஞ்சாலையில் சென்று வரும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பதற்காக பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச்.புதுப்பட்டியில் ரூ.11 கோடி மதிப்பில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த சுங்கச்சாவடி இன்று முதல் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வருகிறது.
பாப்பிரெட்டிப்பட்டி சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டணத்தை நிர்ணயம் செய்திருக்கிறது. அதன்படி கார், ஜீப், வேன், அல்லது இலகுரக வாகனங்கள், ஒரு முறை பயணம் செய்வதற்கு ரூ.70 கட்டணம் ஆகும். அதே வாகனம் அதேநாளில் திரும்பி பயணம் செய்ய ரூ.100-ம், ஒரு மாதத்திற்கு 50 முறை பயணம் செய்ய ரூ.2270-ம் கட்டணம் ஆகும். அதேநேரம் தர்மபுரி மாவட்ட எல்லைக்குள் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்களுக்கு பயண கட்டணம் ரூ.35 (மற்ற வாகனங்களுக்கு 75 ) ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இலகுரக வணிக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் மினி பஸ் ஆகியவற்றிற்கு ஒரு முறை பயணம் செய்ய ரூ.110-ம், அதே நாளில் மீண்டும் திரும்பி வர ரூ.165-ம், ஒரு மாதத்திற்கு 50 முறை பயணம் செய்ய ரூ.3670-ம், தர்மபுரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மேற்கண்ட வாகனங்களுக்கு ரூ.55-ம் (பாதி கட்டணம் தான்) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பேருந்துகள் , லாரி உள்ளிட்ட ஆகிய வாகனங்களுக்கு ஒரு முறை பயணம் செய்ய ரூ.230-ம், அதே நாளில் திரும்பி வர ரூ.345-ம், ஒரு மாதத்திற்கு 50 முறை பயணம் செய்ய ரூ.7685-ம், தர்மபுரி மாவட்ட பதிவு எண் கொண்ட கனரக வாகனங்களுக்கு ரூ.115-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 அச்சுகள் கொண்ட வணிக வாகனங்களுக்கு ஒரு முறை பயணம் செய்ய ரூ.250-ம், அதே நாளில் திரும்பி வர ரூ.375-ம், ஒரு மாதத்திற்கு ரூ.8385-ம், தர்மபுரி மாவட்ட எல்லைக்குள் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ரூ.115-ம், கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பாப்பிரெட்டிபட்டி சுங்கச்சாவடியில் பல அச்சுகள் கொண்ட கட்டுமான எந்திரங்கள் அல்லது மண் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு ஒரு முறை பயணம் செய்ய ரூ.360-ம், அதே நாளில் மீண்டும் திருப்பி வர ரூ.540-ம், ஒரு மாதத்தில் 50 முறை பயணம் செய்ய ரூ.12050-ம் கட்டணம் ஆகும். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பதிவு எண் கொண்ட பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு ரூ.180- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 7 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண்ட வாகனத்திற்கு ஒரு முறை பயணம் செய்ய ரூ.440-ம், அதே நாளில் திரும்பி பயணம் செய்ய ரூ.660-ம், ஒரு மாதத்திற்கு 50 முறை பயணம் செய்ய ரூ.14670-ம் தர்மபுரி மாவட்ட எல்லைக்குட்பட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு ரூ.220-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வணிக உபயோகம் இல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு 2025-2026-ம் ஆண்டிற்கு மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.350 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications