அமித்ஷா அழுத்தம் தரலை.. அண்ணாமலை மாற்ற சொல்லை.. 20 தொகுதி கேட்கலை.. எடப்பாடி சொன்ன 10 பாயிண்டுகள்!
சேலம்: பாஜகவுடனான கூட்டணியை முறித்த பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இது தொடர்பாக விரிவான கருத்துகளை சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவித்தது. ஆனால் இது ஒரு நாடகம்; விரைவில் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனத்தை முன்வைத்தன.

ஆனால் அதிமுக தரப்போ, பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டது; அதில் மாற்றம் எதுவும் இல்லை; இஸ்லாமியர்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரசாரத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடனான கூட்டணி குறித்து விரிவாகவே செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியின் 10 முக்கிய அம்சங்கள்.
1. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும். 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளின் அடிப்படையில்தான் முடிவு எடுக்கப்பட்டது.
2. கூட்டணி விவகாரத்தில் பாஜக தரப்பில் எந்த அழுத்தமும் தரப்படவில்லை. பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ அல்லது பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டாவோ எங்களுக்கு ஒரு அழுத்தமும் தரவே இல்லை.

3. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என பாஜக, அதிமுகவிடம் ஒரு கோரிக்கையையும் வைக்கவில்லை.
4. தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றியாக வேண்டும் என்று அதிமுக தரப்பில் நாங்கள் யாருக்கும் கோரிக்கை வைக்கவும் இல்லை.
5. இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா? என்பது எல்லாம் தேவையில்லாத ஒரு கேள்வி. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்தும் முடிவு செய்துவிட்ட பிறகு தற்போது பாஜகவுடனான கூட்டணி இல்லை என்பதால் இப்படியான கேள்விகள் எல்லாம் தேவை இல்லாதது.

6. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்தது மக்கள் பிரச்சனைகளுக்காக. தொகுதி சார்ந்த கோரிக்கைகளுக்காக. இதற்கும் கூட்டணி விவகாரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. திமுகவினரும் கூடத்தான் மத்திய அமைச்சர்களை சந்திக்கிறார்கள். அதற்காக கூட்டணி என சொல்ல முடியுமா?
7. பாஜக தரப்பில் லோக்சபா தேர்தலுக்கு 20 சீட்டுகள் கேட்கப்படவில்லை. பாஜகவினர் எந்த ஒரு சீட்டும் கேட்கவும் இல்லை. 20 சீட்டுகள் பாஜக கேட்டதாக சொல்வது தவறானது. 20 சீட்டு, 15 சீட்டு வேண்டும் என கேட்கவும் இல்லை; நாங்கள் அது பற்றி பேசவும் இல்லை.
8. 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும். லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்லும்.
9. 2026 சட்டசபை தேர்தலிலும் அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமைக்கப்படும். அத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று மக்களுக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்துவோம்.
10. அதிமுகவுடன் கூட்டணி தொடர விரும்புவதாக பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்திருப்பது அவரது கருத்து. ஆனால் எங்களது கருத்தும் நிலைப்பாடும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது. விபி துரைசாமி கருத்துக்கு நாங்க என்ன செய்யும்? இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications