சொந்த ஊரிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்! ஓ.பன்னீர்செல்வம் டீம் பாய்ச்சல்!
சேலம்: எடப்பாடி பழனிசாமியின் ஊரான சேலத்தில் அவருக்கு கண்டனம் தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான பெங்களூர் புகழேந்தியை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் காரை வழி மறித்து தாக்கிய நிகழ்வு சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி குறித்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெங்களூர் புகழேந்தி கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததே ஆகும். இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக ஓபிஎஸ் அணி ஆதரவாளர் எடப்பாடி ராஜேந்திரன், எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதில் எடப்பாடி பழனிச்சாமி தூண்டுதலின் பேரில் அவருடைய ஆதரவாளர்கள் பெங்களூர் புகழேந்தி மீது தாக்குதல் நடத்தியதோடு, அவதூறு வார்த்தைகளை பேசி உள்ளனர் என்றும் எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதுவரை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மீது காவல்துறை தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஓபிஎஸ் அணி சார்பில் சேலத்தில் பழைய பேருந்து நிலையம் , புதிய பேருந்து நிலையம் , சேலம் டவுன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களுர் புகழேந்தியை தாக்கிய எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மற்றும் துண்டியதாக குற்றஞ்சாட்டப்படும் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தவும் பெங்களூர் புகழேந்தி டீம் தயாராகி வருகிறது.












Click it and Unblock the Notifications