ஜாதி வெறிக்குப் பறி போன சிறுமி ராஜலட்சுமியின் உயிர்.. கொடூர கொலையின் பரபரப்பு பின்னணி
சேலத்தில் சிறுமி ராஜலட்சுமி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
சேலம்: சேலத்தில் சிறுமி ராஜலட்சுமி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரும்பாலும் ஒரு கொலைக்கு பின் நிறைய காரணம் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல்தான் சேலத்தில் கொலை செய்யப்பட்ட ராஜலட்சுமியின் கொலைக்கு பின் இரண்டு காரணம் இருக்கிறது.
இந்தியா முழுக்க எல்லோரும் மீ டு ஹேஷ்டேக் மூலம் தங்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை எழுதிக் கொண்டு இருந்த போதுதான் இந்த கொலையும் நடந்து இருக்கிறது. அதேபோல் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை சொன்ன காரணத்தால்தான் ராஜலட்சுமியும் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
ஆனால் இதில் பாலியல் தொல்லை மட்டும் இல்லை என்பதுதான் கொடூரம். இந்த சிறுமி தலித் சமூகத்தில் பிறந்தவர் என்பதும் கூட இவரை கொலை செய்வதற்கு ஒரு காரணமாக அமைந்து இருக்கிறது.
யார் இவர்
அதிகம் அறியப்படாத சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி கிராமத்தில்தான் ராஜலட்சுமி வசித்து வந்தார். இவருக்கு 13 வயதுதான் ஆகிறது. அங்கிருக்கும் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது அப்பா சாமிவேல் வெட்டியானாக இருக்கிறார். அம்மா சின்னப்பொண்ணு வீட்டில் இருக்கிறார் .
வழக்கம்
இவர்களின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆதிக்க சாதியை சேர்ந்த தினேஷ் குமார் வீட்டிற்கு தண்ணீர் பிடிக்க செல்வதை வழக்கமாக வைத்திருந்தார் ராஜலட்சுமி. ராஜலட்சுமி வீட்டில் தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் தினேஷ் குமார் வீட்டிற்கு சென்று தண்ணீர் பிடித்து வந்துள்ளார். தினேஷ் குமார் மனைவி சாரதாவும் அந்த வீட்டில்தான் வசித்து வருகிறார்.
கடந்த சில நாள்
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ராஜலட்சுமி சரியாக பேசாமல், சாப்பிடாமல் இருந்துள்ளார். 18ம் தேதியிலிருந்து மிகவும் வித்தியாசமாக நடந்து இருக்கிறார் ராஜலட்சுமி. பள்ளிக்கு செல்லாமல், சாப்பிட பிடிக்காமல் கஷ்டப்பட்டுள்ளார் ராஜலட்சுமி. வீட்டில் கேட்டதற்கு எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார்.
உண்மை
இந்த நிலையில்தான் கடந்த 22ம் தேதி மாலை, ராஜலட்சுமி சில உண்மைகளை தனது அம்மா சின்னபொண்ணுவிடம் சொல்லியுள்ளார். தினேஷ் குமார் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தான் என்று சின்னபொண்ணுவிடம் கூறியுள்ளார். தண்ணீர் பிடிக்க சென்ற போது தொந்தரவு செய்தான் என்று கூறியுள்ளார் ராஜலட்சுமி.
அந்த நேரம்
இந்த நிலையில் அந்த அதிர்ச்சி அடங்கும் முன் ராஜலட்சுமி அம்மா சின்னபொண்ணுவிற்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த செய்தியை கேள்விப்பட்ட அடுத்த ஐந்தாவது நிமிடம் அங்கு தினேஷ் குமார் வந்துள்ளான். கத்தியோடு வந்த அவன் சின்னபொண்ணுடன் சண்டையிட்டு இருக்கிறான். ராஜலட்சுமியை தாக்கியுள்ளான். பின் சின்னபொண்ணுவையும் தாக்கியுள்ளான்.
சொல்ல சொல்ல அறுத்தான்
ஒருபக்கம் சின்னப்பொண்ணு விழுந்து கிடக்க இன்னொரு பக்கம் விழுந்து கிடந்த ராஜலட்சுமியின் கழுத்தை கத்தியால் அறுத்து இருக்கிறான். சிறுமி என்று கூட பார்க்காமல் கழுத்தை மொத்தமாக அறுத்து இருக்கிறான் தினேஷ் குமார். அம்மா சின்னப்பொண்ணு தடுக்க முயன்றதும் அவரையும் தாக்கியுள்ளான்.
ஜாதி வெறி
தலையை அறுக்கும் போதே ''தலித் @#$%'' என்று கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டே, வெளியே போய் எல்லாத்தையும் சொல்லுவியா என்று திட்டிக்கொண்டே அறுத்துள்ளான். இதை அனைத்தையும் தற்போது சின்ன பொண்ணு வாக்குமூலமாக போலீசில் கொடுத்துள்ளார்.
மனைவி என்ன சொன்னார்
அதோடு தலையை எடுத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது அவன் மனைவி சாரதா, ''ஏன் இதை இங்க கொண்டு வர அங்கேயே வச்சுட்டு வா'' என்று திமிராக சின்னப்பொண்ணு முன்பே பேசியுள்ளார். அதன்பின் அந்த தலையை எடுத்துக் கொண்டு தினேஷ், போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தான்.
போலீஸ் நிலையம்
இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் முதலில் போலீஸ் அவனை கைது செய்ய மறுத்து இருக்கிறார்கள். அதோடு சாரதா, தினேஷ் குமாருக்கு மனநிலை சரியில்லை, அதனால் அவரை கைது செய்ய கூடாது என்று நாடகம் ஆடியுள்ளார். இந்த விஷயம் தெரிந்த சமூக செயற்பாட்டளர்கள் அங்கு குவிந்தனர்.
கடும் பேச்சுவார்த்தை
கடும் பேச்சுவார்த்தைக்கு பின் இப்போதுதான் தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளான். நான் பிரச்சனை பண்ணுனா, @#$% ஜாதி நீ போய் உங்க அம்மாகிட்ட சொல்லுவியா என்று சொல்லிக்கொண்டே தினேஷ் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் மொத்த தமிழகத்தையும் நடுங்க வைத்துள்ளது. ஆனால் என்ன இந்த மீ டு குறித்துதான் யாருமே பேசவில்லை.