கால் அழுத்திவிட சொல்லிவிட்டு ஓய்வெடுக்கும் கணக்கு ஆசிரியர்.. சேலத்தில் ஷாக்!
சேலம்: மாணவர்களை கால் அழுத்த சொல்விட்டு ஓய்வெடுக்கும் கணக்கு ஆசிரியரின் வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சேலம் மாவட்டம் கிழக்கு ராஜபாளையம் பகுதியில் அரசினர் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியிலிருந்து மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால் பள்ளியில் கணக்கு ஆசிரியராக உள்ள ஜெயபிரகாஷின் நடவடிக்கைகள் சில நாட்களாகவே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இவர் குடிபோதையில் பள்ளிக்கு வருவதாகவும், வந்தாலும் பாடம் எடுக்காமல் தூங்கி வழிவதாகவும் சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கையில்தான் இன்று அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது மாணவர்களை தனது காலை அழுத்த சொல்லிவிட்டு, ஹாயாக அமர்ந்தவாறு ஜெயபிரகாஷ் தூங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சோஷியல் மீடியாக்களிலும் இது தொடர்பான வீடியோ காட்டுத்தீ போல பரவி வருகிறது. குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோரும் கல்வி ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆசிரியர்கள் கல்வியை சொல்லிக்கொடுக்கவே பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். அந்த காலத்தில் வீட்டு வேலை செய்தால்தான் சொல்லிக்கொடுப்பேன் என்று இப்போது சொல்ல் முடியாது. ஏனெனில் ஆசிரியர்களுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து ஊதியம் செல்கிறது. மக்கள் வரி மூலம் பங்களிக்கின்றனர். எனவே உரிய கல்வியை தரமாக சொல்லிக்கொடுக்க ஆசிரியர்கள் கடமைப்படுத்துள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மட்டுமல்லாது அரசு பள்ளியின் மீதான நன் மதிப்பு இப்படியான ஆசிரியர்கள் மூலம் கெட்டுப்போவதாகவும் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு தீவிரமாக முயன்று வருகிறது. அதே நேரம் பள்ளியின் உட்கட்டமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர் இருப்பது, உடற்கல்வி, ஓவியம் உள்ளிட்டவற்றிற்கும் போதுமான ஆசிரியர் இருப்பது போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே உரையாடல் நிகழும் வகையில் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
பள்ளியின் ஒழுக்கத்தை மீறும் ஆசிரியர்கள் மீது உடனடியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications