"பாஜக இன்னும் வளரல.. தமிழகத்தில் ரியல் எதிர்க்கட்சி நாங்கள் தான்!" பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரபர
சேலம்: தமிழ்நாட்டில் தாங்கள் தான் எதிர்க்கட்சி என்று பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நீண்ட காலமாகவே தகவல் பரவி வந்தது. அதற்கேற்றார் போலக் கடந்த வாரம் பாமகவின் சிறப்புப் பொதுக்குழு நடைபெற்றது.
கடந்த வாரம் சென்னை அருகே உள்ள திருவேற்காட்டில் நடந்து இந்த சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில், பாமக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அன்புமணி ராமதாஸ் சேலம் சென்றுள்ளார். அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "திராவிட கட்சிகள் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை விரிவுபடுத்தி முழுமையாக நிறைவேற்ற அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் திட்டமிட்டு வருகின்றன. ஆனால், இதற்கு நாங்கள் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குச் சிறப்புத் திட்டம் ஒன்றை வைத்துள்ளோம்.

ஆளுநர்- முதல்வர் உறவு
சேலம் இரும்பாலை வளாகத்தில் ராணுவத் தளவாட மையம் அமைக்க வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சேலம் மாநகராட்சி திட்டக் கழிவு மேலாண்மை முழுமையாகச் செயல்படுத்தவில்லை. இதைச் சரி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் சுமூக உறவு இருக்க வேண்டும், யாரும் அரசியல் செய்யக் கூடாது.. தமிழ்நாடு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும், மோதல் போக்கு கூடாது.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம் காரணமாகத் தொடர்ந்து தற்கொலைகள் நடந்து வருகிறது. இது நமது சமூகத்திற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்த தலைமுறையை ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து காக்க வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கையை அரசு உடனடியாக எடுக்க வேண்டும், மது, புகை, ஆன்லைன் சூதாட்டம் மக்களை அதிகம் பாதிக்கிறது. இதைத் தடுக்க கடுமையான சட்டம் தேவை.

நாங்கள் தான் எதிர்க்கட்சி
பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்து வருகிறது. ஆனால், இப்போது வரை தமிழ்நாட்டில் பாஜக சின்ன கட்சி தான். ஏற்கனவே சிலர் மாநிலத்தில் பாஜக வளர்ந்துவிட்டதாகச் சொல்லி வருகின்றனர். ஆனால், அது உண்மை கிடையாது. இங்கு மாநிலத்தில் உண்மையான எதிர்க்கட்சி பாமக தான்.. மேகதாது விவகாரம் தொடர்பாக அண்ணாமலை போராட்டம் நடத்துவரா? அவரால் போராட்டம் நடத்த முடியாது. ஏனென்றால் கர்நாடகாவில் இப்போது பாஜக தான் ஆட்சியில் உள்ளது" என்றார்.

திமுக ஆட்சி
தொடர்ந்து திமுக குறித்தும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் பேசிய அன்புமணி ராமதாஸ், "கடந்த ஓராண்டுக் கால திமுக ஆட்சி சிறப்பாக இருந்தது. குறிப்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் அதே நேரம் தேர்தல் காலத்தில் அளித்த பல வாக்குறுதிகளை திமுக இன்னும் கூட நிறைவேற்றவில்லை..

கருணாநிதி
எனக்கு மிகவும் பிடித்த தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. சமூக நிதியை நிலைநாட்ட அவர் பல்வேறு போராட்டங்களை நடத்தி, தமிழ்நாட்டிற்கு அவர் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தவர்! தமிழ்நாட்டில் சமூகநீதியில் எனக்குப் பிறகு ராமதாஸ் மட்டுமே உள்ளார் என்று அவரே திமுக மா.செ கூட்டங்களில் பல முறை சொல்லி உள்ளார்.

ராமதாஸ் - கருணாநிதி
என்னை எங்குச் சந்தித்தாலும் மிகுந்த பாசத்துடன் நடந்து கொள்வோர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே அவர் தலை சிறந்த ஒரு தலைவர்..! பாமக நிறுவனர் ராமதாஸையும் கருணாநிதியையும் நான் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications