கிராக்கி செய்த கிரானைட் தொழிற்சாலை! ஜேசிபியுடன் வந்து நின்ற பாமக எம்.எல்.ஏ.! பதறிய அதிகாரிகள்!
சேலம்: சேலம் மேற்கு தொகுதிக்குட்பட்ட பாகல்பட்டி ஊராட்சியில் மழைநீர் வடிகாலை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பியிருந்த கிரானைட் தொழிற்சாலையால் பாமக எம்.எல்.ஏ. அருள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும், மழைநீர் வடிவதற்கு 2 அடி தூர்வாரிக் கொள்வதாக அனுமதி கேட்டும் அதற்கு கிரானைட் தொழிற்சாலை நிர்வாகம் அனுமதி மறுத்ததால் ஜேசிபி பொக்லைன் இயந்திரத்துடன் சென்று அருள் எம்.எல்.ஏ. அதிர வைத்தார்.
இதையடுத்து அங்கு பதறியடித்து சென்ற வட்டாட்சியர் மற்றும் அரசு வருவாய்த்துறை அதிகாரிகள் கிரானைட் தொழிற்சாலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மழை நீர் வடிகாலுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

கொட்டித்தீர்த்த மழை
சேலம் மாவட்டத்தில் பெய்த பரவலான மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாகல்பட்டி ஊராட்சியில் அரசு மருத்துவமனை உட்பட பல தெருக்களில் மழை நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டனர். இதையடுத்து இது குறித்த தகவல் தொகுதி எம்.எல்.ஏ.வான பாமகவை சேர்ந்த அருளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகல்பட்டி ஊராட்சி
பாகல்பட்டி ஊராட்சிக்கு விரைந்த அருள் எம்.எல்.ஏ. மழைநீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகளுடன் இணைந்து தொடங்கினார். ஒரு இடத்தில் மட்டும் மழை நீரை வெளியேற்ற முடியவில்லை. காரணம் அங்கு வடிகால் பகுதியை ஆக்கிரமித்து கிரானைட் தொழிற்சாலை ஒன்று சுற்றுச்சுவர் எழுப்பியதேயாகும். இதனிடையே மழைநீர் வடிகாலுக்காக 2 அடி தூர் வாரிக்கொள்கிறோம் என அருள் எம்.எல்.ஏ. தரப்பிலிருந்து கிரானைட் தொழிற்சாலை தரப்பிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

ஜேசிபி பொக்லைன்
ஆனால் கிரானைட் தொழிற்சாலை நிர்வாகத்தினரோ அடம்பிடித்ததோடு அதெல்லாம் முடியாது என கிராக்கி செய்துள்ளனர். இதனால் பொறுமையிழந்த பாமக எம்.எல்.ஏ. அருள், ஜேசிபி பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து மழைநீரை வெளியற்றுவதற்கான நடவடிக்கைகளை தொடங்கினார். மேலும், மக்களுக்கு துண்பம் நேர்ந்தாலும் பரவாயில்லை என நினைக்கும் கிரானைட் தொழிற்சாலையை பாகல்பட்டி பகுதியிலிருந்து வெளியேற்றிக் காட்டுவேன் என ஆவேசம் அடைந்தார்.

அதிகாரிகள் பதற்றம்
இந்தத் தகவல் மெல்ல பரவியதை தொடர்ந்து பாமகவினர் அருள் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக பெருமளவில் திரண்டனர். இதையடுத்து பதறியடித்து வந்த வட்டாட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் அருள் எம்.எல்.ஏ. மற்றும் கிரானைட் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இத்தனை களேபரங்கள் ஏற்படுவதற்கு முன்பாக மனிதாபிமான அடிப்படையில் கிரானைட் தொழிற்சாலை வடிகால் அமைத்துக் கொள்ள ஒப்புதல் தெரிவித்திருந்தால் தேவையற்ற பதற்றங்களை தவிர்த்திருக்க முடியும்.












Click it and Unblock the Notifications